Tuesday, December 27, 2016

மறக்க முடியுமா? – புலவர் குழந்தை: எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – புலவர் குழந்தை


அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி-ஆனால், பெயர் மட்டும் குழந்தை!
புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி.
ஆனி 18, 1937 / 1906ஆம் ஆண்டு  சூலை 1ஆம்  நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் தொடங்கி, 1937ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெறுவதில் போய் நின்றது.
இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில் தொடங்கி 37 ஆண்டுகள் தொடர்ந்தன.
பவானி உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
கவி பாட வேண்டும் என்ற வேட்கை. இளமையில் இசைக்கேற்பப் பாடத் தொடங்கினார். பின்னாளில் மரபில் மடை திறந்தார் கவிதைகளை.
நல்ல பேச்சாளர், கவிவாணர், மொழி உணர்வாளர்.
1938, 1948, 1965 ஆகிய ஆண்டுகளில் நுழைய முயன்ற இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகக் களம் இறங்கியவர் இவர்.
இவரின் பேச்சும், பாடல்களும் அங்கே உணர்ச்சிப் பெருக்காயிற்று, மக்கள் உணர்வுப் பிழம்பாயினர்.
1946 தொடக்கம் 1958 வரை ‘வேளாண்’ இதழைத் தொடர்ந்து நடத்திய இதழாளர்.
தந்தை பெரியார் வேண்டுகோளுக்கு இணங்க, சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், குறளுக்கு உரை எழுத ஒரு குழு அமைக்கப்பட்டது.
நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழு அறிஞர்களுடன் புலவர் குழந்தையும் இருந்தார்.
புலவருக்குத் திருக்குறள் மீது இருந்த ஆழ்ந்த புலமையால், அவர் 25 நாட்களில் திருக்குறளுக்கு ஓர் அருமையான உரையை எழுதி முடித்தார்.
அது, ‘திருக்குறள் குழந்தையுரை’ என்று அழைக்கப்பட்டது.
‘யாப்பருங்கலக் காரிகை’ சற்றுக் கடினமாக இருந்ததால், அதை எளிதாக்கி ‘யாப்பதிகாரம்‘ என்ற நூலை எழுதினார்.
பவணந்தி முனிவரின் நன்னூலை எளிமையாக்கி ‘இன்னூல்’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.
‘தொடையதிகாரம்’ என்பது இவரின் இன்னொரு இலக்கண நூல்.
தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு இவர் எழுதிய முழு உரை ‘தொல்காப்பியம் குழந்தை உரை’ ஆகும்.
இப்படித் தமிழோடு மட்டும் உறவாடியவர் அல்லர் புலவர் குழந்தை. இவர் தந்தை பெரியாரின்  தன்மதிப்புச்(சுயமரியாதைச்) சிந்தனையாளர்.
கம்பனோடு போட்டி போட்டவர் குழந்தை.
12 ஆயிரம் பாடல்களைப் பாடினான் கம்பன் – பெயர்  இராமகாதை, இராமாயணம்.
3100 பாடல்களைப் பாடினார் புலவர் குழந்தை – பெயர் ‘இராவண காவியம்’
இருவரும் கவிப்போரரசர்கள்தாம். ஆனால் கம்பன் ஆரியர்களுக்காகப் பாடினான், ஆரியத்தை நிமிர்த்தப் பாடினான், திராவிடர்களைப் பழித்து.
புலவர் குழந்தை ஆரியரைப் புறமொதுக்கிப்பாடினார் ஆரியத்தை தோலுரித்துப் பாடினார், திராவிடரை நிமிர்த்தப்பாடினார்.
கம்பன் பாடியது ஆரியத்திணிப்பு.
குழந்தை பாடியது தமிழரின் இனமானம்.
தமிழ்ப் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவுபடுத்தும் புராணக்கதைகளையே பாடிவந்தார்கள். அதற்கு மாறாக இராவண கவியத்தைப் படைத்து இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன்” – 1971ஆம் ஆண்டு விழுப்புரத்தில் புலவர் குழந்தையை இவ்வாறு பாராட்டுகிறார் தந்தை பெரியார்.
இராவண காவியம் பழைமைக்குப் பயணச்சீட்டு. புதுமைக்கு நுழைவுச் சீட்டு” – இராவண காவிய நூலில் அறிஞர் அண்ணாவின் அணிந்துரை வரிகள் இவை
“கம்பனின் இராமாயணத்தை இராவணகவியமாக மாற்றியமைத்ததன் மூலம், செந்தமிழ்ப் பெருமக்களின் சிந்தனைத் தீயை நெய்யூற்றி வளர்த்தார் புலவர் குழந்தை” – புலவர் குழந்தையை ஒரு சிந்தனைத் தீயாக உருவகம் செய்தார் கலைஞர் 1971 இல்.
ஆரியர்களின் சமூக ஆதிக்கப் பண்பாட்டைத்  தடுத்து நிறுத்தித் தகர்த்தெறிந்த இராவண காவியம் வெளியான ஆண்டு 1948.
  1. தமிழ்க்காண்டம்
  2. இலங்கைக் காண்டம்
  3. விந்தக் காண்டம்
  4. பழிபுரிக் காண்டம்
  5. போர்க் காண்டம்
ஆகியவை இராவண காவியத்தின் 5 காண்டங்கள்.
57 படலங்கள், 3100 பாடல்களைக் கொண்ட இராவண காவியத்தின் தலைவர் இனமான இராவணன். எதிரி(ல்) இராமன்.
அவ்வளவுதான்!
இராவணனைத் தலைவனாக்கி, இராமனை வில்லனாக்கினால் விடுமா காங்கிரசு அரசு?
அன்றைய காங்கிரசு அரசால் அதிரடியாகத் தடை செய்யப்பட்டது புலவர் குழந்தையின் இராவண காவியம்.
தடைக்கு இன்னொரு காரணம் அது திராவிடர்களின் பேரிலக்கியங்களில் ஒன்று.
காலம் மாறியது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் ஏறியது.
திராவிடப் பேரிலக்கியத்தின் தடையைத் திராவிட இயக்க ஆட்சி நீக்கியது – நீக்கியவர் முதல்வர் கலைஞர், ஆண்டு 1971.
அம்மட்டுமன்று,
தொல்காப்பியப் பொருளதிகார உரை, தொல்காப்பியத் தமிழர், திருக்குறளும் பரமேலழகரும், பூவா முல்லை, கொங்குநாடு, தமிழக வரலாறு, கொங்குநாடும் தமிழகமும், அருந்தமிழ் விருந்து, அருந்தமிழ் அமிழ்து, தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் என 15 உரை நூல்கள் –
அரசியலதிகாரம், காமஞ்சரி, நெருஞ்சிப்பழம், ஆடிவேட்டை, கன்னியம்மாள் சிந்து, புலவர் குழந்தை பாடல்கள் என 13 கவிதை நூல்கள் ;
யாப்பதிகாரம், தொடையதிகாரம், இன்னூல் என முன்று இலக்கண நூல்களை எழுதியவர் புலவர் குழந்தை.
புறநானூற்றில், புலவர் பொன்முடியாரின் “ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே” என்ற பாடலின் வழி,
“தாய்மொழி வளர்த்தல் தமிழர்தங் கடனே
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே
ஆய்மொழி உணர்த்தல் அறிஞர் கடனே”
என்று அவர் எழுதிய யாப்பதிகாரத்தில் சொன்ன புலவர் குழந்தை, புரட்டாசி 07, 2003 / 1972ஆம் ஆண்டு செட்டம்பர்  22ஆம் நாள் மறைவு எய்தினார்.
இவரை நாம் மறக்கமுடியுமா?


மூத்த இதழாளர் எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர் : திசம்பர் 1-15, 2016


Sunday, December 11, 2016

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்


தலைப்பு-இலக்குவனாரின்தமிழ்ப்பணிகள், கருத்தரங்கம், தொகுப்புரை, இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_thamizhpanigal_thokuppurai_ilakkuvanar-thiruvalluvan
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 3/7


“சி.இலக்குவனாரின் தமிழ்மொழிச் சிந்தனை”கள் யாவை என ஆய்வாளர் மு.ஏமலதா அருமையாக விளக்கியுள்ளார். சமற்கிருதச் சார்புடையதாகத் தொல்காப்பியத்தைப் பிறர் தவறாகச் சொல்லி வந்ததை மாற்றித் தமிழ்மரபில் தமிழ் மரபு காக்க உருவாக்கப்பட்டது தொல்காப்பியம்;  தமிழில் தூய்மை பேணுவதே தமிழையும் தமிழரையும் காக்கும்; வீட்டுச் சமையல் போன்ற கலப்பில்லாத தூயதமிழே தேவை; குடுகுடுப்பைக்காரன் பிச்சை எடுத்த சோறு பலவகையாகக் கூட்டுச்சோறாக உள்ளதுபோன்ற கலப்பு மொழி தேவையில்லை; பிற நாட்டுப்  பொருள்களுக்குச் சுங்க வரி மூலம் தடை விதிப்பதுபோல், பிற மொழிச் சொற்களுக்கும் தடை விதிக்க வேண்டும்; திருத்தமான  இனிய தமிழையே எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும் எனப் பேராசிரியர் வலியுறுத்துவனவற்றையும்  தெரிவித்துள்ளார்.
  “சங்க இலக்கியச்  சொல்லோவியங்களில் இலக்குவனார் உத்திகள்” யாவை என  ஆய்வாளர் இல.திருப்பதி செல்வம் விளக்குகிறார். வகைப்பாட்டு உத்தி, சொல் விளக்க உத்தி,  நாடக  உத்தி  ஆகியவற்றை இலக்கிய விளக்கத்திற்குப் பயன்படுத்தும் புதிய முறை கையாளல்; பாலைத்திணைக்குப் புது விளக்கம்  தந்துள்ளதுபோல் புதிய விளக்கம் அளித்தல்; பதவுரை, சொல்லாராய்ச்சி, ஆராய்ச்சிக் குறிப்பு, குறிப்புகள், உவமை எனப் புதுவகை ஆராய்ச்சிக்கு வித்திட்டுள்ளமை;  ஆகியவற்றால் பேராசிரியரின் சங்க இலக்கிய விளக்கங்கள் மேலும் ஆய்விற்குரிய களமாகப் பரந்து அமைந்துள்ளன என்றும் தெளிவுபடுத்துகிறார். மேலும், இவர்,  “சொல்லுக்குச் சொல்விளக்கம் என்னும் பகுதியில் தெரியாத சொற்களுக்கு மட்டும் விளக்கம் தந்திருந்தால் போதுமானது” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.  இச்சொற்பொருள் விளக்கப் பகுதியின் பெயர் ‘பதவுரை’ என்பதாகும். பதவுரை என்பது பாடலில் இடம் பெற்றுள்ள எல்லாப் பதங்களையும் விளக்குவதுதான். ஒருவருக்குத் தெரிந்த பொருள் மற்றவருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரு காலத்தில் புரியும் சொற் பொருள் பிறிதொரு காலத்தில் புரியாமல் போகலாம். எனவே, இலக்குவனார் கையாண்ட  முறையே சிறந்தது என்பதை  அவர் உணர வேண்டும்.
  திராவிட இயக்க அறிஞரான “சி.இலக்குவனார் பார்வையில் காமராசர்” வரலாறு, கூறப்பட்டிருப்பதை ஆய்வாளர் செ.சத்தியமூர்த்தி நம் உள்ளத்தில் பதித்துள்ளார்; வெறும் புகழ்ச்சி நூலாக இல்லாமல், ஆட்சியின் குறைகளையும் அவற்றைப் போக்க வேண்டிய தேவைகளையும் எடுத்துக் கூறியுள்ளார்;  நம் மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது போன்ற தமிழ்நல வேண்டுகோள்களையும் வலியுறுத்தியுள்ளார்; காமராசரின் வாழ்க்கை வரலாற்றினை மட்டுமல்லாமல், அக்கால அரசியல்,  மன்பதை நிலைகளையும் தெளிவாகக் காட்டியுள்ளார்; காய்தல் உவத்தலின்றி, நடுநிலையோடு, தமிழ்ப்புலமையுடன் கூடிய எளிமையான நடையில் பேராசிரியர் அளித்துள்ளார் எனப் பாராட்டுகிறார்.
  தொல்காப்பியரின் பேரறிவு, பேராற்றல், பெரும்புலமை முதலியவற்றைத் தம் ஆராய்ச்சிவன்மையால் சிறந்த எடுத்துகாட்டுகளுடன் நிறுவிய புலமை; தொல்காப்பியத்தில் ஆழங்கால் பட்டவராதலால் எழுத்து, சொல், அதிகாரங்களின் மொழியியல் நுட்பங்களையும் பொருளதிகாரம் புகலும் சமுதாயக் கருத்துகளையும் திட்பநுட்பத்துடன் விளக்கும் வியப்புமிகு திறன்; செவ்விய திருக்குறட்பணி; தமிழ்காக்கும் களப்பணியாளர் என அவரது படைப்புகள், அமைப்புகள் மூலம்  “சி.இலக்குவனாரின் அமரவாழ்வும் அருந்தமிழ்த்தொண்டும்”  நாம் போற்றி வணங்கத்தக்கன என்பதை ஆய்வாளர் மு.வரதராசன் உணர்த்துகிறார்.
    “திருக்குறளில் பேரா.சி.இலக்குவனாரின் ஆளுமைத்திறன்”  வெளிப்படுவதை ஆய்வாளர் பொ.ஆறுமுகச் செல்வி புலப்படுத்தியுள்ளார்; வேறுபட்ட, மாறுபட்ட சொல்லைக் கொண்டு பொருள் சொல்லாமல்,குறளில் உள்ள அதே சொல்லைக் கொண்டு மக்கள் எளிதில் புரிந்து வகையில் பொருள் கொடுத்துள்ளார்;  எளிய நடை, இனிய சொற்கள், நல்ல எடுத்துக்காட்டுகள், பழமொழிகள், உரையாசிரியர்கள் உரை மேற்கோள் மூலம், தமிழ்மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளார் என்று எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார்.
   “சி.இலக்குவனாரின் மொழி: பண்பாட்டின் அடையாளம்” என்பதையும் தமிழின் செம்மொழித் தன்மையை விளக்குவதையும் ஆய்வாளர் அ.செயந்தி ‘பழந்தமிழ்’ நூல் மூலம் பாங்குடன் விளக்கியுள்ளார்; மொழியின் தோற்றம், மொழியின் சிறப்பு,  தொடர் அமையும் முறை, பேச்சுமொழி, எழுத்துமொழி,  நூல்வழக்கு, உலக வழக்கு, திராவிடக் குடும்பம் என்று சொல்லாமல் தமிழ்க்குடும்பம் என்று சொல்ல வேண்டியதன் இன்றியமையாமை, இந்தியா முழுவதும் வழங்கிய மொழி தமிழே, சிந்துவெளிப் பழந்தமிழும் இன்றைய தமிழும் வேறல்ல எனப் ‘பழந்தமிழ்‘ நூல் வாயிலாக இலக்குவனார் விளக்குவதை நமக்கு எடுத்தியம்புகிறார்.
  வள்ளுவர் கூறும் இல்லறம் மூலம் “இலக்குவனாரின் பெண்ணியப் பார்வை”யைப் பெருமையுடன் ஆய்வாளர்  இரெ.சந்தான பாபி விளக்கியுள்ளார்; பெண்ணைக் குறிப்பது ஆணுக்கும்  மனைவியைக் குறிப்பது கணவனுக்கும் மகனைக் குறிப்பது மகளுக்கும் தாயைக் குறிப்பது தந்தைக்கும் பொருந்தும் எனச் சிறப்பாக இருபால்  சமத்துவத்தை ஆணித்தரமாக  ஆய்ந்துரைத்துள்ளார்; பெண்ணியத்திற்கு எதிரான பரிமேலழகர் கருத்தைக் கடுமையாகச் சாடுகிறார்; இவ்வாறு இன்றைய உலகின் சிறந்த பெண்ணியச் சிந்தனையாளராகப்  பேராசிரியர்  இலக்குவனார் விளங்குவதைப் பல எடுத்துக்காட்டுகள் மூலம்   அழுத்தமாகப் படம்பிடித்துள்ளார்.
  தொல்காப்பியர் காலத்தில் வருண வேறுபாடு இல்லை; கரணம் என்பதை வேள்விச்சடங்கு என நச்சினார்க்கினியர் கூறுவது தவறுஅக்காலத்திலேயே திருமணப் பதிவு முறை இருந்தது; எனப் பலவகையிலும், “பேராசிரியர் இலக்குவனார் பார்வையில் கற்பியல்” ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ நூலில் தமிழ் மரபிற்கேற்ப விளக்கப்பட்டிருப்பதை இளம் முனைவர் க.வீரம்மாள் விளக்கியுள்ளார்.
  நன்மாணாக்கராக, நல்லாசிரியராக, சிறந்த ல்லூரிமுதல்வராக, புகழார்ந்த இதழியலாளராக, சிறந்த நூலாசிரியராக, ஆராய்ச்சியாளராக, இணையற்ற மொழிபெயர்ப்பாளராக, ஆட்சிக்குழு உறுப்பினர், பேரவை உறுப்பினர், பாடத்திட்ட உறுப்பினர் எனப்பல்வேறு கல்விநிலைப் பொறுப்பாளராக, இயக்கங்களை வழிநடத்துபவராகத் திகழும் “இலக்குவனாரின் பன்முகத்திறன்” குறித்து ஆய்வாளர் தி.உமாபதி சிவகுமார் பழுதற விளக்கியுள்ளார்; முதல்முறையாக அஞ்சல்வழிக்கல்வி தொடங்கியவர், நாளிதழ் தொடங்கிய முதல் மொழிப்பேராசிரியர், கொள்கைகளிலும் மொழிப்பற்றிலும் பிடிவாதமான உறுதியாளர், அஞ்சா நெஞ்சர் என்பனவற்றையும் நமக்கு நவின்றுள்ளார்.
  “பேரா.சி.இலக்குவனாரின் சங்கக்காலம் காட்டும் நாட்டு வளம்” குறித்து ஆய்வாளர் ப.கிருட்டிணம்மாள் இனிதே இயம்பியுள்ளார்.  இதன் மூலம்,  சங்க இலக்கியச் செய்திகளை எளிமையாகவும் சிறப்பாகவும் விளக்கியுள்ளார்; நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் முதிர்ச்சிக்காலம் சங்கக்காலம் எனப் பேராசிரியர் நிறுவியுள்ளார் என்கிறார்; நாடு, நகரம்,  இமயம் முதல் குமரி வரை தமிழகமாக இருந்த நாட்டின் எல்லை,பிற நாட்டு மக்களாலும் விரும்பத்தக்க நாட்டின் வளம், நாட்டின் வீரம் முதலானவற்றை இலக்குவனார் விளக்கியுள்ளதை எடுத்துஆள்கிறார்.
 சங்கக்காலமக்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் விருந்தோம்பலிலும் சிறந்து விளங்கினார்கள்; தட்பவெப்பநிலைக்கேற்பவும் செய்யும் வேலைக்கேற்பவும் மாற்றி மாற்றி ஆடை அணிந்தார்கள்; தலைமுதல் கால்வரை பொன்னாலும் முத்தாலும் மணியாலும் செய்த அணிகலன்களை அணிந்திருந்தனர்; அழகுக்கலையில் சிறந்திருந்தார்கள்; கலைநுணுக்கமிக்க மாளிகைகள், எழுநிலை மாடங்கள் கட்டிக் குடியிருந்தார்கள்; இவ்வாறு, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்‘ நூல்வழியாகப் பன்முக நோக்கில் “பேரா.சி.இலக்குவனார் விளக்கும் சங்கக்காலம் காட்டும் நாகரிகமும்  பண்பாடும்”  நயம்பட உள்ளதாக ஆய்வாளர் மு.வசந்தி திறம்பட விளக்கியுள்ளார்.
   இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ ஆய்வுநூல், செந்தமிழின் செம்மொழிச் சீர்மையை விளக்குகிறது; தேசிய நெறி, அரசு நெறி, தெரிவு நெறி, தூய்மை நெறி, எழுத்து நெறி, பயன்பாட்டு நெறி, உரிமை நெறி,  நூல் நெறி, போராட்ட நெறி,  கல்வி நெறி, காப்பு நெறி, ஆளுமை நெறி, கட்சி நெறி, குமுகாய நெறி, குறிக்கோள் நெறி  ஆகிய  பதினைந்து நெறிகளை வகுத்தளித்துள்ளார்; ஒவ்வொரு நெறி முறையிலும் தமிழ்ப்பற்று, தமிழ் மீட்புணர்வு மிளிர்கின்றது; எனப் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ்ப்படைப்புகள்” மூலம் இளம்முனைவர் பழ.இராசகோபாலன் பகுத்து விளக்குகிறார்; தமிழ், செம்மொழி என்னும் தகுதிப்பேற்றுக்குரிய அனைத்துச் சீரிய பண்புகளும் பெற்றிலங்குவதைப் பழந்தமிழ்  நூல் மூலம் இலக்குவனார் உணர்த்தியுள்ளார் எனவும் விளக்குகிறார்.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
இலக்குவனார்திருவள்ளுவன்

Tuesday, November 29, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] – இலக்குவனார் திருவள்ளுவன்

முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙொ] 3. தமிழ்நலப் போராளி

  புலவர் பட்டம் பெற்ற பின்னர்த் திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு (நகராண்மைக் கழக) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகவும் அடுத்துத் திருவையாற்றில் தாம் படித்த அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். படிக்கும் பொழுதே பரப்புரைப் பணியில் ஈடுபட்ட பேராசிரியர் இவ்விடங்களிலும் அப்பணியைத் தொடர்ந்தார். கல்லூரிகளில் உள்ளவர்களே தொல்காப்பியரை அறியாக்காலத்தில் தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொல்காப்பியருக்கு விழா எடுத்துச்  சிறப்பித்தார்.தொல்காப்பியருக்கு மட்டும் அல்லாமல், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், ஔவையார், எனப் புலவர்கள் புகழ் போற்றும் விழாக்கள் நடத்துவதைத் தம் கடமையாகக் கொண்டு ஒழுகினார்.
 பேராசிரியர் இலக்குவனார் தாம் பணியாற்றிய கல்வி நிலையங்களில் புலவர் விழாக்களுடன் ஆண்டுதோறும் தமிழ் மறுமலர்ச்சி விழா என இயல், இசை, கூத்து என வகுத்து மூன்று நாட்கள் நடத்தினார். இது குறித்துப் பேராசிரியர்,
 தமிழ் மறுமலர்ச்சிக்குக் காரணமான புலவர்களைப் பற்றிச்  சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படும். இருபதாம் நூற்றாண்டுப் புலவர்கள் பற்றி இவ்விழாவில் உரைகள் நிகழும். இவ் விழாக்கள் மாணர்களிடையேயும் மற்றவர்களிடையேயும் தமிழ் மறுமலர்ச்சியை உருவாக்கப் பயன்பட்டன. தமிழ்ப் பற்றுடையோர் உள்ளங்கள் தழைத்தன
 எனக் குறிப்பிட்டுள்ளார்(என் வாழ்க்கைப் போர்). இவ்வாறு விழாக்கள் மூலம், தமிழ் இலக்கியச் சிறப்பையும் தமிழ் எழுச்சி உணர்வையும் ஊட்டினார். விழாக்களுக்குப் பெற்றோர்களையும் வரவழைத்துப் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்தார். அக்காலத்திலேயே பெற்றோர் ஆசிரியர் மாணவர் சந்திப்புகளை மிகுதியாக நிகழ்த்திய முன்னோடிக் கல்வியாளராகவும் திகழ்ந்தார்.
  “மக்களை வருத்தும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதும் தமிழை மாய்க்கும் வேற்றுமொழிச் சோற்களின் நுழைவைத் தடுத்தலும் தமிழ் மறுமலர்ச்சியைத் தழைக்கச் செய்தலும் தமிழ் ஆசிரியர்களின் தவிர்க்கலாகாக் கடன்” (என் வாழ்க்கைப் போர்: கையெழுத்துப்படி) என முழங்கும் பேராசிரியர் தாம் அவ்வாறே முன் எடுத்துக்காட்டாகப் பணியாற்றி வந்தார். ஆதலின் தந்தை பெரியாரால் அனுப்பப்பட்ட தன்மதிப்பியக்கத் தொண்டராகப் பலர் கருதினர். இதனாலேயே சீர்திருத்தக் கருத்துகளையும் தனித்தமிழையும் விரும்பா மறு சாராருக்கு இவர் வேண்டாதவரானார். இது குறித்துப் பொருட்படுத்தாத பேராசிரியர், இலக்கியப் பரப்புரையுடன் “தமிழ்ச் சொற்களிருக்க வேற்றுச் சொற்களை விரும்புவதேன்?” எனக் கேட்டுத் “தமிழிலே உரையாடுக! தமிழிலே எழுதுக! தமிழிலே பெயர்களிடுக! தமிழ் தமிழ் என்று  முழங்குக!” என மக்களிடையே வலியுறுத்தித் தமிழராய் வாழ உணர்த்தினார்.
 தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின்
  பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்.
  ஏங்கவைக்கும் வடமொழியை, இந்தியினை
  எதிர்த்திடுவீர் அஞ்ச வேண்டா.
  …            …         …                                
  கடல்போலும் எழுக!கடல் முழக்கம்போல்
  கழறிடுக தமிழ்வாழ் கென்று!
  கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம்
   தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!
 (பாவேந்தர் பாரதிதாசன்: தமிழியக்கம்)
 என அறிவுறுத்தி வந்தார்; தாமும் தமிழ் காக்கும் கேடயமாகத் திகழ்ந்தார்.
 நன்னிலத்தில் பணியாற்றும்போது, ‘தமிழ் கற்பிக்கும் முறை’ என இக்காலத்திற்கேற்றவாறு மரபார்ந்த தமிழைக் கற்கும் முறை குறித்துப் பேராசிரியர் நூல் எழுதினார். இது குறித்து அவரது கருத்து வருமாறு:
  “மாணவர்கள் சிறந்தோராக உருவாதல் ஆசிரியர்களையே சார்ந்துள்ளது. நல்ல தமிழ்ப்பற்றாளராக மாணவர்கள் வெளிவருதல் தமிழாசிரியர்களையே சார்ந்துள்ளது. தமிழாசிரியர்களில் பலர் மாணவர்கள் உள்ளங்களில் தமிழ்ப்பற்றை விதைக்க வேண்டும் என்ற கருத்தில்லாதவராகவே காலம் கழித்தனர். மாணவர்க்கும் தமிழார்வம் உண்டாகும் வகையில் தமிழைக் கற்பிக்கும் வழிமுறையை மேற்கொள்ளாது இருந்தனர். அப்பொழுது  தோன்றிய இந்தியெதிர்ப்பு இயக்கத்தால் மாணவர்களிடையே தமிழ்ப்பற்று கனல்போல் பரவத் தொடங்கியது. மாணவர்கள் தமிழாசிரியர்களை மதிக்கத் தலைப்பட்டனர்.
  தமிழ் மறுமலர்ச்சி கொள்ளத் தொடங்கியது. சூழ்நிலைக்கு ஏற்பத் தமிழாசிரியரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கருதி தமிழாசிரியரின் பொறுப்பினை வலியுறுத்திக் கூறும் நோக்குடன் ‘தமிழ் கற்பிக்கும் முறை’ என்ற நூலொன்றினை எழுதி வெளியிட்டேன். கற்பிக்கும் முறை பற்றிய ஆங்கில நூல்களைப் படித்து ஆங்கில நாட்டில் ஆங்கில மொழியின் நிலையை அறிந்து, தமிழ்நாட்டில் தமிழ் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும் என்று எழுதினேன். இந்நூலுக்கு அணிந்துரை தருமாறு தலைமையாசிரியர் சாமிநாத(ப்பிள்ளையைக்) கேட்டபோது, இதனைப் படித்து விட்டுத் தமிழாசிரியர்களில் பலர் உங்கள்மீது கல் வீசுவார்கள் என்று கூறி, அதன் புரட்சித்தன்மையை வெளியிட்டார். இந்நூலுக்கு ‘ இந்து’வில் நல்ல மதிப்புரை வெளிவந்திருந்தது. அதன் பின்னர் நாட்டில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பல கல்வி நிலையங்கள் அஞ்சல் வழியாகப் பெற்றன.”
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்