Saturday, May 11, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 87 : அத்தியாயம்-53 : அம்மை வடு

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்-தொடர்ச்சி)

நான் பல்லக்கில் சூரிய மூலையை அடைந்தபோது பகல் 11 மணி

இருக்கும் அம்மையென்ற காரணத்தால் என்னை நேரே அம்மானுடைய

வீட்டிற்குள் செல்ல அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை

வெளியூர்களிலிருந்து சிலர் வந்திருந்தனர். நான் இருந்த பல்லக்கு வீட்டுக்கு

எதிரே உள்ள தென்னந்தோப்பில் இறக்கி வைக்கப்பட்டது.

எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அங்கே அவ்வளவு

பேர்கள் கூடியிருந்ததற்குக் காரணம் இன்னதென்று தெரிந்த போது நான் இடி

விழுந்தவன் போலானேன். நான் அங்கே சென்ற தினத்திற்கு முதல் நாள் என்

அருமை மாதாமகரும், சிவ பக்தியை எனக்கு இளமையிலேயே புகட்டியவரும்

ஆன கிருட்டிண சாத்திரிகள் சிவசாயுச்சிய பதவியை அடைந்தனர். அவருடைய

இனிய வார்த்தைகளையும் சிவபூசா விசேடத்தையும் வேறு எங்கே

காண்போமென்று இரங்கினேன்.

குழப்பமான நிலை

இந்நிலையில் தோப்பிலே நான் பல்லக்கிற் கிடந்தபடியே வருந்துகையில்

சஞ்சயனத்தை நடத்தி விட்டு என் அம்மானாகிய சிவராமையருடன் என்

தந்தையாரும் பிறரும் வந்தனர். என்னை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல்

இருந்தவர்களைக் கண்டு அம்மான் கோபித்துக் கொண்டார். “நம்முடைய

குழந்தை; அவன் இன்னல்படும்போது அவனுக்கு உதவாக வீடு வேறு எதற்கு?

நன்றாய்ப் பிச்சைக்காரன் மாதிரி தோப்பில் நிறுத்தி வைத்தீர்கள்? உங்கள் மனம்

கல்லோ!” என்று சொல்லிப் பக்கத்தில் ஒருவரும் குடியில்லாமல் தனியேயிருந்த

அவருடைய வேறொரு வீட்டைத் திறந்து விரைவில் என்னை அங்கே

கொணர்ந்து வைக்கச் செய்தார்.

பிறகு என் தந்தையாரும் தாயாரும் வந்து என்னைக் கண்டு மிகவும்

வருந்தினார்கள். வேண்டிய பரிகாரங்களைப் பிறர் செய்ய நான் அவ்வீட்டிலே

இருந்து வந்தேன். எனக்குக் கண்டிருப்பது பெரியம்மையின் வகையாகிய

பனையேறியம்மையென்று அங்குள்ளோர் சொன்னார்கள். நான் சௌக்கியமாக

வந்து சேர்ந்ததை ஆசிரியரிடம் தெரிவிக்கும்படி எனக்குத் துணையாக வந்த

அரிகரபுத்திர பிள்ளையிடம் சொல்லி அனுப்பினேன்.

அம்மையின் வேகம்

ஒரு நாள் எனக்கு அம்மையின் வேகம் அதிகமாயிற்று. நான் என்

நினைவை இழந்தேன். அப்போது எல்லாரும் பயந்து போயினர். என்

தாயாரும் தந்தையாரும் கண்ணீர் விட்டனர்.

எனக்கு நினைவு சிறிது வந்தபோது, “நாம் மிகவும் அபாயமான

நிலையில் இருக்கிறோம்” என்ற உணர்வு உண்டாயிற்று. அருகில் கண்ணும்

கண்ணீருமாய் இருந்த என் தாயாரை நோக்கி, “நான் பிறந்து உங்களுக்கு

ஒன்றும் செய்யாமற் போகிறேனே!” என்று பலகீனமான குரலில் சொன்னேன்.

அதைக் கேட்டு அவர் கோவென்று கதறினார். என் தந்தையாரும் துக்க

சாகரத்தில் ஆழ்ந்தார். ஒன்றும் அறியாத குழந்தையாகிய என் தம்பி அருகில்

இருந்து மருள மருள விழித்தான்.

ஆண்டவன் திருவருளால் அக்கண்டத்தினின்றும் நான் தப்பினேன்.

அம்மை கடுமையாக இருந்தாலும் அக்கடுமை என் உடம்பில் தழும்பை

உண்டாக்கியதோடு நின்றது. என் பாட்டனார் இறந்த துக்கத்தின் நடுவிலே

வளர்ந்து வந்து அத்துன்ப நிலையை நினைவுறுத்தும் அடையாளமாக இன்றும்

சில அம்மை வடுக்கள் என் உடலில் இருக்கின்றன.

மார்கழி மாதம் முழுவதும் நான் மிக்க துன்பத்தை அடைந்தேன்.

தைமாதம் பிறந்தது. எனக்குச் சிறிது சௌக்கியம் உண்டாயிற்று; தலைக்குச் சலம்

விட்டார்கள். திருவாவடுதுறையில் அசுவதி நட்சத்திரத்திலே குருபூசை

நடைபெற்றது. அன்று இரவு சூரியமூலையில் என் அம்மான் வீட்டுத்

திண்ணையில் இருந்தபடியே பார்த்த போது திருவாவடுதுறையில் ஆகாச

வாணங்கள் தெரிந்தன. முந்தின வருடத்தில் நான் திருவாவடுதுறையிலே கண்ட

காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக என் ஞாபகத்துக்கு வந்தன. என் ஆசிரியர்

பலருக்குச் செய்யுள் இயற்றி அளித்ததை நினைத்த போது, “இவ்வருடமும்

அத்தகைய ஆச்சரிய நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே!”

என்று வருந்தினேன்.

“நாம் இல்லாத காலத்தில் மாணக்கர்களுக்கு என்ன என்ன பாடங்கள்

நடந்தனவோ! நாம் என்ன என்ன அரிய விசயங்களைக் கேளாமல்

இருக்கிறோமோ!” என்ற சிந்தனையும் எனக்கு இருந்தது. பிள்ளையவர்கள்

மார்கழி மாதத்தில் புறப்பட்டுச் சில ஊர்களுக்குச் சென்று தை மாதம்

குருபூசைக்கு வந்தார்கள் என்ற செய்தி எனக்குப் பிறகு தெரிய வந்தது.

அப்பொழுதுதான், “நமக்கு அதிகமான நட்டம் நேரவில்லை” என்று எண்ணி

ஆறுதல் உற்றேன். பிள்ளையவர்கள் விருப்பப்படி அடிக்கடி

திருவாவடுதுறையிலிருந்து சிலர் வந்து என்னைப் பார்த்துச் செல்வார்கள்.

மகாமகம்

அந்த வருடம் (1873) மகாமக வருடம். மகாமக காலத்தில்

கும்பகோணத்திற் பெருங்கூட்டம் கூடுமென்றும் பல வித்துவத்துசபைகள்

நடைபெறும் என்றும் கேள்வியுற்றிருந்தேன். சிரீ சுப்பிரமணிய தேசிகர் தம்

பரிவாரங்களுடன் சென்று தங்குவாரென்றும், பல வித்துவான்கள் அவர் முன்

கூடுவார்களென்றும், பிள்ளையவர்களும் அவருடன் போய்த் தங்குவாரென்றும்

அறிந்தேன். “நம்முடைய துரதிர்ட்டம் எவ்வளவு கொடியது! பன்னிரண்டு

வருடங்களுக்கு ஒருமுறை வரும் இவ்விசேடத்துக்குப் போய் வர நமக்கு

முடியவில்லையே! பிள்ளையவர்களைச் சார்ந்தும் அவர்களோடு சேர்ந்து

இப்புண்ணிய காலத்தில் நடக்கும் விசேடங்களைக் கண்டு களிக்க முடியாமல்

அசௌக்கியம் நேர்ந்து விட்டதே!” என்றெல்லாம் நினைந்து நினைந்து

வாடினேன்.

சூரிய மூலையிலிருந்து சிலர் மகா மகத்துக்குப் போய் வந்தனர். அங்கே

சுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் வந்திருந்தார்களென்றும் பல பல

விசேடங்கள் நடைபெற்றனவென்றும் அவர்கள் வந்து சொல்ல எனக்கும்

இயல்பாகவே இருந்த வருத்தம் பின்னும் அதிகமாயிற்று.

ஆசிரியரை அடைதல்

என் தேக நிலை வர வரக் குணமடைந்து வந்தமையால், “இனி

விரைவில் பிள்ளையவர்களிடம் போக வேண்டும்” என்று அடிக்கடி

சொல்லிக்கொண்டே இருந்தேன். என் தந்தையார் என் வேகத்தை

உணர்ந்து மாசி மாதம் 17-ஆம் தேதி (29-2-1873) புதன்கிழமை மாலை

என்னை அழைத்துக்கொண்டு திருவாவடுதுறைக்கு வந்தார்.

அப்பொழுது மடம் என்றும் இல்லாத கலகலப்போடு இருந்தது. மகா

மகத்திற்குப் போயிருந்த வித்துவான்களும் பிரபுக்களும் சுப்பிரமணிய

தேசிகரோடு திருவாவடுதுறைக்கு வந்திருந்தனர். எல்லாரும் அவரவர்களுக்கு

அமைக்கப் பெற்ற இடங்களில் தங்கியிருந்தனர்.

மடத்தில் கீழைச் சவுகண்டியில் பிள்ளையவர்கள் பலருக்கிடையே

இருந்து சம்பாசணை செய்திருந்தனர். அவ்விடத்தை அணுகி ஆசிரியரைக்

கண்டேன். அப்போது என் உடம்பில் உள்ள அம்மை வடுக்களைக் கண்டால்

அவர் வருத்தமடைவாரென்று எண்ணி அவர் கண்களுக்குத் தெரியாதபடி

அதிகமாக விபூதியை உடம்பு முழுவதும் பூசியிருந்தேன். ஆசிரியர் என்னைக்

கண்டவுடன் மிக்க அன்போடு, “சாமிநாதையரா? இப்போது உடம்பு

சௌக்கியமாயிருக்கிறதா? உடம்பு முழுவதும் வடுத் தெரியாமல் விபூதி கவசம்

தரித்திருக்கிறது போல் தோற்றுகிறது. உம்முடைய ஞாபகமாகவே இருக்கிறேன்.

கண்ணப்ப நாயனார் புராணத்தோடே பெரிய புராணம் நின்றிருக்கிறது. மகாமக

காலத்தில் நீர் இருந்திருந்தால் எவ்வளவோ சந்தோசமாக இருந்திருக்கும்”

என்று கூறினார். அப்பால் என் தந்தையாரைப் பார்த்து சேம சமாசாரங்களை

விசாரித்தார்.

(தொடரும்)

Thursday, May 09, 2024

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 03. என் தமிழ்ப்பணி

 




(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 02. என் கடன் பணி செய்து கிடப்பதே! – தொடர்ச்சி)

தலைமையுரையில், ஞானியார் அவர்கள் “கோவிந்தன் பேசிய நேரம் சிறிய நேரம் என்றாலும், என் சிந்தனைக்கு மட்டுமல்லாமல் அனைவர் சிந்தனைக்கும் அரிய வேலை கொடுத்துவிட்டான்” எனக் கூறிப் பாராட்டினார்.
மற்றுமொரு நிகழ்ச்சி : நான் வித்துவான் பட்டம் பெறாத நேரம். ஆசிரியர்பால் பின்னர் தமிழ் கற்க வந்த கோமான் ம. வீ. இராகவன் அவர்கள் அந்த ஆண்டு. வித்துவான் தேர்வு எழுதியிருந்தார், அந்நிலையில் திருவத்திபுரத்திற்கு வருகை தந்த, எங்கள் ஆசிரியரின் ஆசிரியர் கரந்தைக்கவியரசு ஆர் வெங்கடாசலம் பிள்ளை அவர்கள், இராகவன் தேர்வில் நன்றாக எழுதியுள்ளார் எனக் கூறினார். அது கேட்ட ஒளவை அவர்கள் என்னைச் சுட்டிக் காட்டி, “இவன் அவனைவிடத் தெளிவாகப் படித்தவன்?” என்று கூறிச் சென்று விட்டார்.
கவியரசு அவர்கள் என்னை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு, இலக்கியத்திலும், இலக்கணத்திலுமாகச் சில கேள்விகளைக் கேட்டார். கூடுமானவரை நல்ல விடையே கூறினேன். என் அறிவு எனக்குத் தானே தெரியும். மேலும் அவர் கேட்டால் விழிக்க வேண்டி நேரும். ஆசிரியர் நற்சான்றிற்கு மாசு நேரக் கூடும் என்பதால் கவியரசை விட்டு ஓடி விடத் திட்டமிட்டு அவரிடம் ஓர் ஐயம் எழுப்பினேன். “தொல்காப்பியர் எழுவாய் வேற்றுமைக்கு இலக்கணம் கூறும்போது எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே” என்றார். அதாவது சொல் எவ்விதத் திரிபும் இல்லாமல் இருப்பது. அவ்வாறு கூறிய அவரே ‘நீயீர்’ என்ற எழுவாய்ச் சொல்லுக்கு இலக்கணம் கூறும்போது “நும்மின் திரிபெயர்” என்று கூறியுள்ளார். இது முன் கூறிய இலக்கணத்திற்கு முரண் ஆகாதா? நும்மின் திரி, பெயராகிய நீயீர் என்பது பிற வேற்றுமைகளை ஏற்கும்போது மீண்டும் நும், எனத் திரிந்து, “தும்மை நும்மால்” என ஆவானேன் என்ற இரு ஐயங்களை எழுப்பினேன். அவர் சிந்திக்கத் தொடங்கி விட்டார். விட்டால் போதும் என ஓடி விட்டேன்.

பள்ளியில் மற்றொரு தமிழாசிரியர் திரு. பாலசுந்தர நாயகர் அவர்கள் வித்துவான் தேர்வில் வெற்றி பெற்றார். அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த தலைமை ஆசிரியரின் அனுமதி கேட்டோம். அவர் மறுத்து விட்டார். பானுகவி மாணவர் கழகமும் விழா நடத்த முன் வரவில்லை. அதனால் ஒளவைத் தமிழ் மாணவர் கழகம் என்ற புதிய கழகத்தைத் தொடங்கி அவருக்கு மிகப் பெரிய பாராட்டு விழாவினை நடத்தினோம்.

ஓராண்டு கழிந்தது; 1936இல் முதலாண்டு விழா நடத்த முடிவு செய்தோம். விழாத் தலைமைக்கு மறைமலை அடிகளாரை அழைக்க முடிவு செய்தோம். ஆசிரியர் ஒளவை அவர்கள் அவருக்கு கடிதம் எழுத, அடிகளார் ஒரு நாளைக்கு 100 வெண் பொற்காசுகள் (அதாவது ரூபாய்) தர வேண்டும் என்றும் உணவு இவ்வகையில் இருக்க வேண்டும் என்றும் பதில் எழுதி விட்டார்.
எங்களிடம் அவ்வளவு தொகை இல்லை; ஆனாலும் மறைமலையாரை அழைக்கும் ஆசையும் குறையவில்லை. ஒருநாள் ஆசிரியர் அவர்களிடமும் சொல்லாமல் பல்லாவரம் சென்று, அரைக்கிலோ கற்கண்டு, 2 சீப்பு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, மலர்மாலை இவற்றை வாங்கிக் கொண்டு அடிகளார் மாளிகை சென்று ஒரு தட்டு வாங்கி, அதில் இவற்றை வைத்து எடுத்துக் கொண்டு அவரிடம் சென்று அவர் கையில் தட்டைக் கொடுத்துவிட்டுக் காலில் வீழ்ந்து வணங்கினேன். (நான் வணங்கிய முதல்வர் அவர் தான்.)
வாழ்த்தி எழுந்திருக்கப் பணித்துவிட்டு, யார்? வந்தது ஏன் என வினவினார்: அழைக்க வந்தேன் என்றேன். ஒளவைக்குக் கடிதம் எழுதி விட்டேனே என்றார். கையில் இருப்பது 200 வெள்ளிக் காசுகள்தாம் என்றாலும் தாங்கள் வந்து விழாத் தலைமை தாங்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன், ஒப்புக் கொண்டார்.
1936 மே 24, 25, 26 ஆகிய நாட்களில், திருவத்திபுரம் எங்கள் தெருவில், கோயிலை அடுத்து தெருவை அடைத்துப் பெரிய பந்தல் போட்டு விழா நடத்தினோம்.
வித்துவான் பட்டம் பெற்ற பின்னர் பி.ஓ.எல். பட்டம், பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. கல்லூரி சென்று படிக்காமல் வீட்டிலிருந்தே தேர்வு எழுதுவதானால் 3ஆண்டு
ஆசிரியராகப் பணி புரிந்திருக்க வேண்டும்; தேர்வுக்கு மனுச் செய்யும்போது ஆசிரியராக இருக்க வேண்டும் என்பது பல்கலைக் கழக விதி. அதனாலும், இரண்டாம் உலகப் போர் காரணத்தால் அறிஞர் அண்ணா உள்ளிட்ட கழகத்தவர். அனைவரும் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா அணிக்கு ஆதரவான பிரசாரம் செய்ய முனைந்து விட்டனர், அதனாலும், வேலூரில் என் பழைய தமிழாசிரியர் சென்ற அதே பள்ளியில் ஆசிரியராக 1942-இல் சேர்ந்தேன். 1944 வரை பணி புரிந்தேன். அங்கும் தமிழ்ப்பணி தொடர்ந்தது.

பி.ஓ.எல். தேர்வில் முதல் பகுதி பி.எசு. வகுப்பிற்குரிய ஆங்கில இலக்கியம். இரண்டாம் பகுதி தமிழ் வித்துவான் தேர்வு, மூன்றாம் பகுதி திராவிட மொழி ஒப்பிலக்கணமும், தென்னிந்திய வரலாறும் (ஆங்கிலத்தில்). இரண்டாம் பகுதியை முன்னரே முடித்து விட்டேன். முதல் பகுதியையும் முடித்து விட்டேன். மூன்றாம் பகுதியில் தென்னிந்திய வரலாற்றுக்குரிய நூல்களாகிய திருநீலகண்ட சாத்திரியாரின் சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, திரு. கோபாலன் அவர்களின் பல்லவ வரலாறு, திரு. பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்களின் தமிழர் வரலாறு ஆகிய ஆங்கில நூல்களை வாங்கிக் கொண்டேன். காலுடுவெல் ஒப்பிலக்கணத்தை இலண்டனில் உள்ள தம் நண்பர் மூல்ம் வாங்கித் தந்தார் ஆசிரியர்.
அவற்றைப் படிக்கும்போது காலுடுவெல் ஒப்பிலக்கணத்தையும், பி.டி.எசு. அவர்களின் தமிழர் வரலாற்றையும் தமிழில் மொழி பெயர்த்தால் பி.ஓ.எல். படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் என எண்ணினேன்.
வேலூரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர், தாமரைச் செல்வர், அமரர். சுப்பையா பிள்ளை அவர்கள்,
சென்னையில், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தலைமையில், 22-2-42-இல் நடைபெறும் நற்றிணை மாநாட்டில் ‘பாலை’ என்ற தலைப்பில் சொற் பொழிவு ஆற்றுமாறும், ஆற்றும் சொற்பொழிவை அப்படியே எழுதித் தருமாறும் வேண்டினார். நானும் அது செய்தேன்.
அம்மாநாட்டினைத் தொடர்ந்து திரு. சுப்பையா அவர்களின் நட்பு தொடர்ந்தது. இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தருமாறு அன்புக் கட்டளை இட்டார்.
“திருமாவளவன்” என்ற முதல் நூல் 1951இல் வெளிவந்தது. (என் முதல் மகனின் பெயரும் திருமாவளவன் என்பது குறிப்படல் நலம்.) அதைத் தொடர்ந்து சங்க காலப் புலவர் என்ற வரிசையில் 16 நூல்களையும், அரசர் என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார் புலவர் வரிசையில் முதல் நூல் 1952இலும், அரசர் வரிசையில் கடைசி நூல் 1955லும் வெளிவந்தன.
தமிழ் எழுத்தாளர் உலகிற்கு அறிமுகமாகாத என் நூல்கள் இருபத்தைந்தை மூன்றாண்டு கால அளவில் வெளியிட்டு எனக்குப் பெருமை சேர்த்த திருவாளர் பிள்ளை அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
எழுத்துப் பணி தொடர, மலர் நிலையம், வள்ளுவர் பண்ணை, அருணா பதிப்பகம் என்ற வெளியீட்டார் மூலம் பல நூல்கள் வெளி வந்தன. அரசியல் பணிகளுக்கிடையே காலுடுவெல் அவர்களின் ஒப்பிலக்கண மொழி பெயர்ப்பு 1959இல் வள்ளுவர் பண்ணை மூலம் வெளிவந்தது.
1990 ஏப்பிரல் 15ஆம் நாளன்று, என் ஐம்பதாவது நூலாக, திரு. பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் தமிழர் வரலாறு மொழிபெயர்க்கப் பெற்று, திரு. பிள்ளை.
அவர்களின் மருகர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் முயற்சியால் கழக வெளியீடாக வெளியிடப் பெற்றது. அவருக்கு நன்றி.
இப்போது (1991) அவர் பணிக்க, திருவாளர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்களின் Origin and Spread of Tamils, (‘தமிழரின் தோற்றமும் பரவலும்’) என்ற நூல் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளது. திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் Pre Aryan Tamil Culture (ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு) என்ற நூலை மொழி பெயர்த்து முடித்துவிட்டு, அவரின் மற்றொரு நூலாகிய Stone Age in India (இந்தியாவில் கற்காலம்) என்ற நூலை மொழி பெயர்க்க எடுத்துக் கொண்டுள்ளேன்- என் எழுத்துப்பணி தொடரும். குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி, பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். “கல்வி கரையில் கற்பவர் நாள்சில” காலம் இடம் தந்தால் என் எழுத்துப் பணி ஓரளவேனும் முற்றுப் பெறும்.

(தொடரும்)

Saturday, May 04, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 85: திருப்பெருந்துறைப் புராணம் – தொடர்ச்சி)

121 செய்யுட்களில் நாட்டுப்படலம் நிறைவேறியது. கடவுள் வணக்கம்
முதலியவற்றோடு 158 செய்யுட்கள் இயற்றப் பெற்றன. அடிக்கடி சுப்பிரமணிய
தேசிகர் புராணத்தைப்பற்றிப் பிள்ளையவர்களை விசாரிப்பார். நான் தனியே
சென்று பேசும்போது என்னையும் வினவுவார். நான் இன்ன இன்ன பகுதிகள்
நிறைவேறின என்று சொல்லுவேன். அவருக்குச் செய்யுட்களைக் கேட்க
வேண்டுமென்ற ஆவல் உண்டாகும்.

நாட்டுப்படலம் முடிந்தவுடன் ஆசிரியர் அதுவரையில் ஆன
பகுதிகளைச் சுப்பிரமணிய தேசிகர் முன்பு படித்துக்காட்டச் செய்தார்.
அச்சமயம் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வந்திருந்தார்.
செய்யுட்களைக் கேட்டுத் தேசிகர் பாராட்டிக் கொண்டே வந்தார்.
“திருப்பெருந்துறை பெரிய சிவசேத்திரம். மாணிக்கவாசக சுவாமிகள் அருள்
பெற்ற தலம். அதற்கு ஏற்றபடி இப்புராணமும் சிறப்பாக இருக்கிறது. சீக்கிரம்
இதை நிறைவேற்றி அரங்கேற்றிப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.
செட்டியாரும் மிகவும் பாராட்டினார்.

அக்கவிஞர்பிரான் நாள்தோறும் சிலசில பாடல்களைச் செய்து வந்தார்.
அடிக்கடி யாரேனும் பார்க்க வருவார்கள். அவர்களோடு சம்பாசணை
செய்வதில் பொழுது போய்விடுமாதலால் சில நாட்கள் புராண வேலை
நடைபெறாது. தமிழ்ப்பாடம் மாத்திரம் தடையின்றி நடந்து வந்தது.

பெரிய புராணப் பாடம்

தம்பிரான்களுடைய வேண்டுகோளின்படி ஆசிரியர் பெரிய புராணப்
பாடம் நடத்த ஆரம்பித்தார். அப்போது தியாகராசசெட்டியாரும், மகாவைத்தியநாதையரும், அவர் தமையனாராகிய
இராமசாமி ஐயரும் மடத்திற்கு வந்திருந்தனர்.

நான் பெரிய புராணம் படிக்கும்போது அபசுவரம் இல்லாமல்
படிப்பதைக் கண்டு மகாவைத்தியநாதையர் சந்தோசமடைந்தார். சில நாட்கள்
அவர் திருவாவடுதுறையில் தங்கினமையின், அவரோடு பழகி அவருடைய
குணங்களை அறிந்துகொள்ள அனுகூலமாயிற்று. அவரோடு பழகப் பழக
அவருடைய சிவபக்தியும், ஒழுக்கமும், வரையறையான பழக்கங்களும்,
தூய்மையும் என் மனத்தைக் கவர்ந்தன
. சுப்பிரமணிய தேசிகரால் தாம்
முன்னுக்கு வந்ததை எண்ணி அவர் விநயமாக நடந்து கொண்டதைப் பார்த்த
போது அவரது நன்றியறிவு எவ்வளவு சிறப்பான தென்பதை நான்
உணர்ந்தேன்.

அவர் என்னிடம் அன்பு பாராட்டி எனக்கு எவ்வாறு சங்கீதப் பயிற்சி
ஏற்பட்டது என்று கேட்டார். நான் எங்கள் குடும்ப வரலாற்றையும் தந்தையாரது
சங்கீதத் திறமையையும் எடுத்துச் சொன்னேன். எனக்குத் தெரிந்த கனம்
கிருட்டிணையர் கீர்த்தனங்களையும் பாடிக் காட்டினேன். அவர் கேட்டு
மகிழ்ந்தார்.

வைசூரி

ஆங்கீரச வரு்ம் கார்த்திகை மாதம் (1872 நவம்பர்) முதல்
பெரியபுராணப் பாடம் நிகழ்ந்து வந்தது. கண்ணப்ப நாயனார் புராணம்
நடைபெற்றபோது எனக்குத் திடீரென்று கடுமையான சுரம் வந்துவிட்டது.
உடம்பில் எங்கும் முத்துகள் உண்டாயின. எல்லாரும் பெரியம்மை
வார்த்திருப்பதாகச் சொன்னார்கள். அதனால் பெரியபுராணப் பாடம்
கேட்கவோ மற்றக் காரியங்களைச் செய்யவோ ஒன்றும் இயலவில்லை.
சத்திரத்தின் ரேழி (இடைகழி)யில் படுத்தபடியே இருந்தேன். பிள்ளையவர்கள்
சில சமயங்களில் வந்து அருகில் உட்கார்ந்து, “உமக்கு இப்படி அசௌக்கியம்
வந்துவிட்டதே!” என்று வருந்துவார். என் கண் இமைகளின் மேலும்
கொப்புளங்கள் எழுந்தமையால் கண்களைத் திறக்க முடியவில்லை.
பிள்ளையவர்கள் வரும்போது படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்வேன்.
துக்கம் பொங்கிவரும். கண்ணையோ திறக்க முடியாது. கண்ணீர் வழிய வழிய
நான் என் வருத்தத்தைத் தெரிவித்தேன். “என் பாட்டனார் ஊராகிய சூரிய
மூலைக்குப் போய்த் தேக சௌக்கியம் உண்டான பிறகு வருகிறேன்’ 
என்றேன்.
அவ்வாறே செய்யலாம் என்று கூறி என்னை அனுப்புவதற்கு வேண்டிய
ஏற்பாடு செய்யலானார்கள். அப்பொழுது மடத்துக்குக் கல்லிடைக்குறிச்சியி லிருந்து வீரராகவையர் என்ற கனவான் ஒருவர் தம் குடும்பத்துடன் வந்து சத்திரத்தில் தங்கியிருந்தார். அவருடைய முதிய தாயார் ஒரு விதமான உதவி செய்வாரும் இல்லாமல் நான் இடர்ப்படுவதைக் கண்டு இரங்கி வருந்தி, “அப்பா! நீ கவலைப்படாதே; நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறி என் அருகில் இருந்து வேண்டிய
அனுகூலங்களைச் செய்து வந்தார். இரவு முழுவதும் தூங்காமல் என்னைக்
கையைப் பிடித்து அழைத்துச் சென்றும், தாகமென்று சொன்ன போதெல்லாம்
வெந்நீர் வைத்துக் கொடுத்தும் பாதுகாத்தார். எனக்குத் துன்பத்தைக் கொடுத்த
அம்மையின் தெய்வம் அத்துன்பத்தினிடையே பாதுகாப்பதற்கு அவ்வுருவம்
எடுத்து வந்ததாகவே எண்ணினேன்.

தை மாதத்தில் நடைபெறும் குருபூசை சமீபித்துக்கொண்டிருந்தது.
அதன் பொருட்டுப் பலர் வருவார்களாதலால் அச்சமயத்தில்
திருவாவடுதுறையில் இருப்பது நல்லதன்று என எண்ணியே நான் சூரிய மூலை
செல்வதாக என் ஆசிரியரிடம் கூறினேன்.

விடை பெறுதல்

என் அசௌக்கியத்தையும் அதனால் பிள்ளையவர்களுக்கு ஏற்பட்ட
வருத்தத்தையும் அறிந்த சுப்பிரமணிய தேசிகர் பெரிய புராணப் பாடத்தை
நிறுத்தும்படி கட்டளையிட்டார்.

என்னை ஒரு பல்லக்கில் இருக்கச் செய்து சூரிய மூலைக்கு
அனுப்பினார். மூங்கில் வளைவுள்ள அப்பல்லக்கு மூடி இல்லாதது; அவசரத்தில்
வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. கண்ணை மூடியபடியே எல்லாரிடமும்
விடைபெற்றுக் கொண்டேன். பிள்ளையவர்களும் பிறரும் என்னைப் பார்த்து
மிகவும் விசனப்பட்டார்கள்.

“சாமிநாதையர், போய் வருகிறீரா?” என்ற பேச முடியாமல்
வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தழுதழுத்தபடியே பொங்கி வரும் துயரத்தில்
நனைத்துக் கூறினார் ஆசிரியர்.

எனக்குப் பேச வாய் வரவில்லை. குழறினேன்; அழுதேன்; காலை எட்டு
மணிக்குப் பல்லக்கில் நான் சூரிய மூலையை நோக்கிப் பிரயாணப்பட்டேன்.
பிள்ளையவர்கள் என்னுடன் அரிஅரபுத்திர பிள்ளை என்ற மாணாக்கரை
வழித்துணையாகச் சென்று வரும்படி அனுப்பினார். சூரிய மூலைக்குத்
திருவாவடுதுறையிலிருந்து போக அப்போது வசதியான சாலையில்லை.
வயல்களின் கரைவழியே போக வேண்டும். எனக்கும் பிள்ளையவர்களுக்கும்
இடையிலே உள்ள தூரம் அதிகமாயிற்று. என் உள்ளத்தில், “இந்தத் தூரம் இப்படியே
விரிந்து சென்று விடுமோ?” என்ற எண்ணம் சிறிது தோன்றியது; அப்போது
என் வயிறு பகீரென்றது.

பல்லக்கு, சூரிய மூலைக்கு அருகில் உள்ள ஒரு தோப்பு வழியே
சென்றபோது என் தந்தையார் எதிரே வந்தனர். நான் இருந்த நிலையைக்
கண்ட அவர் திடுக்கிட்டுப் போனார். அவர் வந்த கோலம் ஏதோ ஒரு
விசேடத்தைக் குறிப்பித்தது. கண்ணை நன்றாகத் திறந்து பார்க்க என்னால்
முடியவில்லை. “பேசாமல் வீட்டுக்குப் போ; பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று
தந்தையார் சொல்லிச் சென்றார்.

(தொடரும்)