(உ.வே.சா.வின் என் சரித்திரம் : அத்தியாயம்- 48 : சில சங்கடங்கள்-தொடர்ச்சி)

என் சரித்திரம்
அபய வார்த்தை

ஓதுவார், “ஐயா, அவரைச் சொன்னால் நாக்கு அழுகிப்போம்.
இருந்திருந்து பரம சாதுவாகிய அவரைச் சொல்ல உமக்கு எப்படி ஐயா மனம்
வந்தது!” என்றார். அம் மனிதர் ஒன்றும் சொல்ல மாட்டாமல் எழுந்து போய்
விட்டார்.

அபய வார்த்தை

அந்த மூவர் வார்த்தைகளையும் நான் கேட்டேன். “நல்ல வேளை,
பிழைத்தோம்” என்ற ஆறுதல் எனக்கு உண்டாயிற்று. உடனே எழுந்தேன்.
“இவ்வளவு நேரம் என்னைப் பற்றி நடந்த சம்பாசணையைக் கவனித்தேன்.
எனக்கு முதலில் உண்டான சங்கடத்தை நீங்கள் நீக்கி விட்டீர்கள். என்
உள்ளம் பதறிவிட்டது. இப்போது தான் என் மனம் அமைதியை அடைந்தது.
என்னை ஒரு பெரிய அபவாதத்திலிருந்து காப்பாற்றினீர்கள்” என்று
அவர்களை நோக்கிக் கூறினேன். அப்படிப் பேசும்போது எனக்கு ஒரு
விதமான படபடப்பு இருந்தது. அதைக் கவனித்த பன்னிருகைத் தம்பிரான்,
“நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? நாங்கள் எதையும் நம்பிவிடுவோமா?
எந்தக் காலத்தும் உங்களுக்கு ஒரு குறைவு வரும்படி செய்ய மாட்டோம்.
வந்த மனுசன் ஏதோ அசட்டுத் தனமாய்ச்சொன்னானென்று நினைக்க வேண்டும். அதை மறந்து விடுங்கள்”
என்று சொல்லி என்னைத் தேற்றினார். “இந்த அபய வார்த்தைகளை நான்
ஒரு போதும் மறவேன்” என்று கூறினேன்.

கண்டி அகப்பட்டது

எங்கே பார்த்தாலும் இந்தக் களவைப்பற்றிய பேச்சாகவே இருந்தது.
மறுநாட் காலையில் பத்து மணிக்கு மடத்தின் ஒரு பக்கத்தில் பன்னிருகைத்
தம்பிரான் சிலரோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று
குளப்புரையிலிருந்து ஒரு வேலைக்காரன் மிகவும் வேகமாக ஓடிவந்து
தம்பிரானிடம் அந்தக் கண்டியைக் கொடுத்து, “சாமீ, இன்று காலையில் நான்
எல்லா இடங்களையும் பெருக்கிக் கொண்டிருந்தேன். படித்துறைச் சுவரின் மாட
மொன்றில் உள்ள விநாயகருக்குப் பின்னே ஏதோ பளிச்சென்று தெரிந்தது.
உடனே கவனித்தேன். இந்தக் கண்டி அகப்பட்டது” என்று சொன்னான்.

அதை வாங்கிக் கொண்டு பன்னிருகைத் தம்பிரான் மிகவும் மகிழ்ச்சி
அடைந்து, “நேற்று நான் அனுசுட்டானத்துக்குப் போகையில் அங்கே இதை
மாடத்தில் வைத்து விட்டுத் தோட்டத்துக்குப் போனேன். அப்போது
திடீரென்று ஒரு சேவகன். “சந்நிதானம் அவசரமாக அழைக்கிறது” என்று
குடல் தெறிக்க ஓடிவந்து சொன்னான். என்னவோ ஏதோ என்று நானும்
மிகவும் வேகமாக வேறொன்றையும் கவனியாமல் சந்நிதானத்திடம் போனேன்.
சந்நிதானம் ஒரு முக்கியமான விசயத்தைப்பற்றிக் கட்டளையிட்டது. சில நேரம்
அதே கவலையாக இருந்தேன். கண்டியைப் பற்றிய ஞாபகமே எனக்கு
உண்டாகவில்லை. சிறிது நேரம் பொறுத்தே அந்த ஞாபகம் வந்தது. பல
தடவை யோசித்துப் பார்த்தும் வைத்த இடம் ஞாபகத்துக்கு வரவில்லை. நான்
வைத்த இடத்தைவிட்டு மற்ற இடங்களிலெல்லாம் தேடினேன். பிறரையும்
தேடச் செய்தேன் அகப்படவில்லை. எப்படியோ இது சந்நிதானத்துக்கும்
தெரிந்து விட்டது. வயசு ஆக ஆக மறதி உண்டாகிறது. அனாவசியமாகப்
பலருக்குக் கவலை ஏற்பட்டது. பாவம்? சாமிநாதையர் மிக்க சஞ்சலத்தை
அடைந்து விட்டார்” என்று எல்லோரிடமும் சொன்னதோடு, உடனே எனக்கும்
அதைப்பற்றிச் சொல்லி அனுப்பினார். இச்செய்தி காதில் விழுந்ததும் நான்
விநாயகர் சந்நிதி சென்று வந்தனம் செய்தேன்.

கோளால் வந்த துன்பம்

வேறொரு சமயம் என் ஆசிரியரிடம் யாரோ ஒருவர் சென்று
என்னைப்பற்றிக் கோள் கூறினார்
. அதனால் பிள்ளையவர்கள் என்பால் சினங் கொள்ளலாயினர். யாரிடமேனும் கோபங் கொண்டால் அவரிடம்
பேசாமல் இருந்துவிடுவது ஆசிரியரது வழக்கம். என்னிடமும் அவ்வாறு
இருக்கத் தொடங்கினார். மடத்திற் பாடம் நடக்கையில் படிப்பதும், ஆசிரியர்
ஏதேனும் பாடல் சொன்னால் எழுதுவதுமாகிய வேலைகளையே நான் செய்து
வந்தேன். நான் அருகில் இருக்கும்போது, “ஏடு எடுத்துக் கொள்ளும், எழுதும்”
என்று சொல்ல மாட்டார். படுத்துக் கொண்டே ஏதேனும் ஒரு பாடலின் முதல்
அடியை ஆரம்பிப்பார். அது புதுப் பாடலாக இருந்தால் அதனை எழுத
வேண்டுமென்பது அவர் குறிப்பென்று நான் அறிந்து, ஏட்டையும்
எழுத்தாணியையும் எடுத்து எழுதத் தொடங்குவேன்.
 அவர் சொல்லிக்
கொண்டே போவார். நிறுத்த வேண்டுமானால் சரியென்பார். அந்தக் குறிப்பை
அறிந்து நான் நிறுத்தி விடுவேன்.

தனியே பாடங் கேட்பதும் பேசுவதும் இன்றி இந்நிலையில் சில நாள்
நான் இருந்து வந்தது என் மனத்தை மிகவும் உறுத்தியது. இதை வேறு
யாரிடமும் தெரிவிக்கவில்லை; உள்ளத்துள்ளே நான் மறுகினேன்.

அப்போது மாயூரத்தில் வசந்தோற்சவம் நடந்தது. அந்த உற்சவ
தரிசனத்துக்குச் சுப்பிரமணிய தேசிகர் ஒருநாள் திருக் கூட்டத்துடனும்
பரிவாரங்களுடனும் சென்றார். 
ஆசிரியரும் சென்றார். அவருடன் நானும் சில
மாணாக்கர்களும் சென்றோம். மாலையில் மாயூரம் போய்ச் சேர்ந்தோம்.
சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் சிரீ மாயூரநாதராலயத்திற்குப் போய்த்
தரிசனம் செய்து பிறகு மடத்துக்கு வந்தார். வருங்காலத்தில் என்னை ஒரு
காரியத்தரோடு அனுப்பி ஆகாரம் செய்து வரும்படி சொன்னார். இவ்விசயம்
பிள்ளையவர்களுக்குத் தெரியாது. அவர் தம் வீட்டில் தங்கியிருந்தார்.

நான் போசனம் செய்துவிட்டுப் பிள்ளையவர்கள் வீட்டுக்கு வந்து
திண்ணையில் இருந்தேன். அப்போது மடத்தில் பந்தி நடந்தமையால் அங்கே
ஆகாரம் செய்து கொள்ளப் பிள்ளையவர்கள் போயிருந்தார்.

ஆச்சரிய நிகழ்ச்சி

மடத்தில் பந்தி நடைபெறும் பொழுது சுப்பிரமணிய தேசிகரும் அங்கே
போய் உணவு கொள்வார். அப்பந்தியில் தம்பிரான்களும் சைவர்களாகிய
வெள்ளை வேட்டிக்காரர்களும் தனித்தனியே வரிசையாக இருந்து புசிப்பார்கள்.
வெள்ளை வேட்டிக்காரர்கள் வரிசையில் முதல் இடம் பிள்ளையவர்களுக்கு
உரியது
.

வழக்கம்போல் ஆசிரியர் அவ்விடத்தில் அமர்ந்தபோது அவர் எப்பொழுதும்
இருப்பதைப் போன்ற தெளிவோடு இல்லை. ஏதோ ஒரு கவலை அவர்
முகத்தில் தோற்றியது. போசனம் செய்யும் பொருட்டு ஆசனத்தில் அமர்ந்தவர்
திடீரென்று எழுந்தார். அவ்வாறு யாரும் செய்யத் துணியார். சம்பிரதாயத்தை
நன்கு அறிந்த பிள்ளையவர்கள் அப்படி எழுந்திருந்ததைக் கண்டு யாவரும்
பிரமித்துப் போனார்கள். சுப்பிரமணிய தேசிகர் அவருக்கு ஏதோ கவலை
இருப்பதை அறிந்து ஒருவர் மூலம் விசாரித்தார். “சாமி நாதையர் என்னுடன்
வந்தார். அவர் ஆகாரம் செய்வதற்கு ஒன்றும் ஏற்பாடு செய்யாமல் வந்து
விட்டேன். பட்டினியாக இருப்பாரே என்று எண்ணி விசாரித்து வருவதற்காக
எழுந்தேன்” என்று அவர் சொன்னதைக் கேட்ட தேசிகர், “அவரை ஒரு
காரியாத்தரோடு ஆகாரம் செய்ய அனுப்பியிருக்கிறோம். இதற்குள் அவர்
போசனம் செய்து வந்திருப்பார்” என்றார்.

‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’

ஆசிரியர் ஒருவாறு ஆறுதலுற்றார். ஆனாலும் அவர் மனம் சமாதானம்
அடையவில்லை. உணவிலே மனம் செல்லாமல் போசனம் செய்பவர் போலப்
பாவனை செய்து இருந்துவிட்டு யாவரும் எழுவதற்கு முன்பே எழுந்து கையைச்
சுத்தி செய்து கொள்ளாமலே வேகமாக மடத்திற்கு அடுத்ததாகிய தம் வீடு
நோக்கி வந்தார். அவர் வேகமாக வருவதைக் கண்டு திண்ணையில் இருந்த
நான் எழுந்து நின்றேன்.

நான் இருந்த இடத்தில் தீபம் இல்லாமையால் அவர் என் சமீபத்தில்
வந்து முகத்தை உற்று நோக்கி, “சாமிநாதையரா? ஆகாரம் செய்தாயிற்றா?”
என்று கேட்டார், “ஆயிற்று” என்று சொன்னதைக் கேட்ட பிறகே அவர் மனம்
சமாதானம் அடைந்தது. உள்ளே சென்று கையைச் சுத்தம் செய்துகொண்டு
தீபம் கொணர்ந்து வைக்கச் சொன்னார்.

பிறகு என்னுடன் மிக்க அன்போடு பேசத் தொடங்கினார். அவர்
அவ்வளவு வேகமாக வந்ததும், என் முகத்தைக் கூர்ந்து கவனித்ததும், சில
தினங்களாகப் பேசாதவர் அவ்வளவு அன்போடு பேசியதும் எனக்குக் கனவு
நிகழ்ச்சிகளைப் போல இருந்தன.

சிறிது நேரத்திற்குப் பிறகு மடத்திலே இருந்து சிலர் வந்து என்னைக்
கண்டு, “ஐயாவுக்கு உம்மிடத்திலே உள்ள அன்பை இன்று நாங்கள் அறிந்து
கொண்டோம். உம்முடைய பாக்கியமே பாக்கியம்
” என்று கூறி அங்கே
நிகழ்ந்தவற்றைச் சொன்னபோது எனக்கு எல்லாம் விளங்கின. சில நாட்களாகத் தாம் என்பால் காட்டி வந்த பராமுகத்துக்குத் தாமே பரிகாரம் தேடியவரைப் போல என் ஆசிரியர் விளங்கினார்.

அன்பை எவ்வளவு காலம் தடைப்படுத்த முடியும்? தடைப்படுத்தப்பட்ட
அன்பு என்றாவது ஒரு நாள் மிக வேகமாக வெளிப்படத் தான் வேண்டும்
அப்போது ஏற்படும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமாகவே இருக்கும்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.