(உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு


அவற்றைக் கவனிப்பதற்காக அவர் அங்கே இருக்கிறார்.
கல்லிடைக்குறிச்சியிலும் திருவாவடுதுறையைப் போலவே மடமும் அதற்கு
அங்கமாகிய கோயில் முதலிய இடங்களும் பரிவாரங்களும் உண்டு.
சந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருடங்கள் அங்கே
எழுந்தருளி இருந்தது இந்த ஆதீனத்திற்கு இராசதானி நகரம் போன்றது
திருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவது
கல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத் திலுள்ளவர்கள்
கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும்
சொல்வதுண்டு.”

“திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சி புரிவது
போலல்லவா இருக்கிறது?” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்.

“மடத்தின் பெருமை உமக்கு வர வரத்தான் தெரியும் சீடர்கள்
எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவ்வாதீனத்தின் சம்பந்தம்
இருக்கும். காசி முதல் கன்னியாகுமரி வரையில் முக்கியமான
சிவத்தலங்களிலும் ஆதீனத்தின் சம்பந்தம் உண்டு
” என்று ஆசிரியர்
உரைத்தார்.

கடிதங்கள் எழுதப் பெற்ற கனவான்களிற் பலர் சந்தோசத்தோடு விடை
எழுதினர். நமச்சிவாய தேசிகரும் எழுதியிருந்தார்.

சிதம்பரம் பிள்ளையின் விவாகம் குறிப்பிட்ட முகூர்த்தத்தில் மிகவும்
சிறப்பாக நடந்தது. அதற்குப் பல கனவான்கள் வந்து விசாரித்து மகிழ்ந்து
சென்றனர். அக்கனவான்களை அறிந்து கொண்டது எனக்குப் பெரிய
இலாபமாயிற்று.

கலியாண நிகழ்ச்சிகள்

கலியாணத்தில், திருவாவடுதுறையிலிருந்துவந்த காரியத்தர்கள் தங்கள்
தங்களால் செய்யக்கூடிய காரியங்களைச் செய்தார்கள். என்னுடைய
சகபாடியாகிய சவேரிநாத பிள்ளை பம்பரமாகச் சுற்றிப் பல காரியங்களை
நிறைவேற்றினார். என்னால் முடிந்தவற்றை நான் கவனித்தேன்.

முகூர்த்த தினத்தின் மாலையில் பாட்டுக் கச்சேரி, விகடக் கச்சேரி, பரத
நாட்டியம், வாத்தியக் கச்சேரி எல்லாம் நடந்தன. ஒரு பெரிய சமீன்தார் வீட்டு
விவாகம் போலவே எல்லாவிதமான சிறப்புகளோடும் அது நடைபெற்றது. பரத நாட்டியம் ஆடிய பெண்பாலுக்குச் சபையில் உள்ள கனவான்கள் இடையிடையே பணம்
கொடுத்தனர்.

அப்போது பிள்ளையவர்கள் என்னை அழைத்து அருகில் இருக்கச்
செய்து என் கையில் ஒரு உரூபாயைக் கொடுத்து அப்பெண்ணிடம் அளிக்கச்
சொன்னார். எனக்கு மிகவும் சங்கோசமாக இருந்தது; ஆனாலும்,
ஆசிரியருடைய கட்டளையை மறுத்தற்கு அஞ்சி அப்படியே கொடுத்தேன்.
அங்கிருந்த யாவரும் என்பால் பிள்ளையவர்களுக்கு இருந்த அன்பை
இதனாலும் அறிந்து கொண்டார்கள்.

தஞ்சைவாணன் கோவை

விவாகம் நிறைவேறிய பின்பும் சில வாரங்கள் நாங்கள் மாயூரத்தில்
தங்கியிருந்தோம். சவேரிநாத பிள்ளையும் நானும் பழைய பாடங்களைப் படித்து
வந்தோம். அதோடு தஞ்சைவாணன் கோவையைப் புதிதாக ஆசிரியரிடம்
பாடம் கேட்டு வந்தோம். அவர் அகத்துறைச் செய்திகளை விளக்கிச்
சொன்னார். முன்பே சீகாழிக் கோவையைப் பாடம் கேட்டபோது பல
விசயங்களை நான் தெரிந்து கொண்டிருந்தாலும் மீண்டும் அவற்றை
ஞாபகப்படுத்திக் கொண்டதோடு பல புதிய செய்திகளையும் அறிந்தேன்.

தஞ்சைவாணனென்பவன் பாண்டிய மன்னனுக்குச் சேனாதிபதியாக
இருந்த வேளாளச் செல்வனென்றும், அவன் வாழ்ந்திருந்த தஞ்சை பாண்டி
நாட்டிலுள்ள தஞ்சாக்கூரென்னும் ஊரைக் குறிப்ப தென்றும் சொன்னார்.

தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியராகிய பொய்யாமொழிப்
புலவரை
ப் பற்றிய வரலாற்றையும் ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்தார்.

அப்பாத்துரை ஐயர்

இரண்டு மாத காலம் நான் மாயூரத்தில் இருந்தேன். அப்போது
தினந்தோறும் பிள்ளையவர்கள் விருப்பத்தின்படி, மாயூரநாதசுவாமி கோயில்
சந்நிதி வீதியில் இருந்த அப்பாத்துரை ஐயரென்பவர் வீட்டில் ஆகாரம் செய்து
வந்தேன். அவரும் அவர் மனைவியாரும் என்னிடம் மிக்க அன்பு
காட்டினார்கள். மடத்திலிருந்தோ பிள்ளையவர்களிடமிருந்தோ என் பொருட்டு
அவருக்கு எவ்விதமான உதவியும் கிடைக்கவில்லை. என்னாலோ
காலணாவுக்குக்கூடப் பிரயோசனம் இல்லை. அரிசி முதலிய பண்டங்கள்
அவருக்கு அளிக்கும்படி ஏற்பாடுசெய்யப்படுமென்று நம்பியிருந்தேன். அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை.

அவர் வறியவரென்பதை அறிந்த நான் அவருக்குச் சிரமம் கொடுப்பதற்கு
அஞ்சினேன். என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினேன்.

பழமும் பாலும்

ஒரு நாள் இரவு மற்ற மாணாக்கர்களுடன் பிள்ளையவர்களிடம் பாடம்
கேட்டபோது, அது முடிய ஒன்பது மணிக்கு மேல் ஆயிற்று. முடிந்தவுடன்
அவரவர்கள் உணவு கொள்ளச் சென்றார்கள். அப்பொழுது அதிக மழைபெய்து
கொண்டிருந்தது. எனக்கு மிகவும் களைப்பாகவும் தூக்கக் கலக்கமாகவும்
இருந்தமையால் போசனம் செய்யச் செல்லாமல் அப்படியே ஓரிடத்தில்
படுத்துத் தூங்கிவிட்டேன். ஆகாரம் செய்துவிட்டு வந்த ஆசிரியர் நான்
படுத்திருப்பதைக் கண்டார். தினந்தோறும் நான் சாப்பிட்டு வந்து ஆசிரியரோடு
பேசியிருந்துவிட்டுப் பிறகே துயில்வது வழக்கம். அன்று நான் அவ்வாறு
செய்யாமையால் நான் ஆகாரம் செய்யவில்லை என்பதை அவர் உணர்ந்து
என்னை எழுப்பச் செய்தார். நான் எழுந்தவுடன் உண்மையைக் கேட்டு அறிந்து
உடனே ஆகாரம் செய்து வரும்படி ஒரு மனுசருடன் என்னை அனுப்பினார்
இரவு நெடுநேரமாகி விட்டபடியால் அப்பாத்துரை ஐயர் வீட்டில் எல்லாரும்
படுத்துத் தூங்கிவிட்டனர். போசனம் கிடைக்கக்கூடிய வேறு சில
இடங்களுக்குப் போய்ப் பார்த்தும் ஒன்றும் கிடைக்காமல் திரும்பினேன்.
அதனை அறிந்த என் ஆசிரியர் மிகவும் வருந்திப் பாலும் பழமும் வருவித்து
அளித்து என்னை உண்ணச் செய்தார்.

மறுநாட் காலையில் நான் எழுந்தவுடன் ஆசிரியர் என்னை அழைத்து,
“நீர் திருவாவடுதுறைக்குப் போய் அங்கே உள்ளவர்களோடு பழைய
பாடங்களைப் படித்துக்கொண்டிரும். நான் விரைவில் அங்கு வந்து விடுவேன்”
என்றார்.

ஏன் அவ்வாறு சொன்னாரென்று எனக்குத் தெரியவில்லை. “நான்
அதுவரையில் இங்கேயே இருந்து ஐயாவுடன் வருகிறேனே?” என்றேன்.

“வேண்டா; இங்கே உமக்கு ஆகார விசயத்தில் சௌகரியம்
போதவில்லை. திருவாவடுதுறையில் சந்நிதானம் எல்லாவற்றையும் கவனித்துக்
கொள்ளும்” என்று வற்புறுத்திச் சொல்லவே நான் மறுப்பதற்கு அஞ்சி
அவ்வாறே செய்ய உடன்பட்டேன்.

சுருங்கிய தனமும் விரிந்த மனமும்

புறப்படுவதற்கு முன் அப்பாத்துரை ஐயரிடம் விடை பெற்றுக்
கொள்ளும் பொருட்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். “இவர்களுக்குஒரு பிரதியுபகாரமும் செய்யாமல் இருக்கிறோமே!” என்ற வருத்தத்தோடு செல்லுகையில், என் இடையில் இருந்த வெள்ளி அரைஞாண் ஞாபகத்திற்கு வந்தது. என் சிறிய தந்தையார் இரட்டை வடத்தில் அவ்வரைஞாணைச் செய்து எனக்கு அணிவித்திருந்தார். அப்பாத்துரை
ஐயரிடம் அதனைக் கழற்றிக் கொடுத்து, “நான் இப்போது திருவாவடுதுறை
போகிறேன். இவ்வளவு நாள் என்னால் உங்களுக்குச் சிரமம் நேர்ந்தது. இதை
வைத்துக் கொள்ளுங்கள். பிறகு செலவுக்கு அனுப்பி இதை வாங்கிக்
கொள்ளுகிறேன்” என்றேன்.

அதை அவர் திருப்பி என் கையில் அளித்து, “அப்பா, நன்றாயிருக்கிறது நீ பண்ணின காரியம்! உனக்குச் சாதம் போட்டா எங்களுக்குக் குறைந்து போய் விடுகிறது? உனக்காக நாங்கள் என்ன விசேச ஏற்பாடு பண்ணிவிட்டோம்? ஏதோ நாங்கள் குடிக்கிற கஞ்சியையோ கூழையோ உனக்கும் கொடுத்து வந்தோம். நீ நன்றாக வாசித்து விருத்திக்கு வந்தால் அதுவே போதும்” என்று சொன்னார். அவர் வருவாய் சுருங்கியிருந்தாலும், அவருக்குள்ள சௌகரியங்கள் சுருங்கியிருந்தாலும் அவருடைய அன்பு நிறைந்த மனம் எவ்வளவு விரிந்ததென்று நான் அறிந்து உருகினேன்.
இவர்களே மனிதர்கள்! இவர்களுக்காகத்தான் மழை பெய்கிறது; சூரியன்
உதயமாகிறான்”
 என்று என் மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன். அவரையும்
அவர் மனைவியாரையும் வணங்கிவிட்டுப் புறப்பட்டேன்.

அரைஞாணை ஏற்றுக்கொள்ள மறுத்த பிறகு நான் என்ன செய்ய
முடியும்? ‘செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் காலம் வருமோ?” என்று என்
உள்ளம் ஏங்கியது. பிற்காலத்தில் எனக்கு வேலையான போது அக்கடனை
ஒருவாறு தீர்த்துக் கொண்டேன்.

அப்பால் பிள்ளையவர்கள் முதலிய எல்லாரிடமும் விடை பெற்று
நான் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.