(உ.வே.சா.வின் என் சரித்திரம் 98 : பிரிவில் வருத்தம்-தொடரும்)

எங்கே பார்த்தாலும் விசபேதியின் கொடுமை பரவியிருந்தது. திருவாவடுதுறையைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் அந்நோய்க்கு இரையானவர்கள் பலர். திருவாவடுதுறையிலும் சிலர் இறந்தனர். அதுகாறும் அத்தகைய நோயை அறியாத சனங்கள், “காலம் கெட்டுவிட்டது. கலி முற்றுகிறது. தருமம் அழிந்து வருகிறது. அதனால்தான் இக்கொள்ளை நோய் வந்திருக்கிறது” என்று சொன்னார்கள். “இரெயில் வந்தது. ஆசாரம் ஒழிந்தது, அதற்குக் தக்க பலன் இது” என்று சிலர் பேசினர்.

அரசாங்கத்தார் அந்நோய் பரவாதபடி மருந்துகளை ஊர்தோறும் வாங்கிக் கொடுத்தனர். மாயூரத்தில் இருந்த முன்சீப் வேதநாயகம் பிள்ளையும் தம்மாலான உதவியைச் செய்தார். அன்றியும் அந்நோய்க்குரிய மருந்தை வாங்கிக் கிராமந்தோறும் கொடுக்கும்படி செய்யவேண்டுமென்ற கருத்தை அமைத்துச் சில பாடல்களை இயற்றிச் சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பினார். அப் பாடல்களில் ஒன்று வருமாறு:

(கட்டளைக் கலித்துறை)

“இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றி

மலக்கண் விளைபிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுமிந்நோய்

விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனா

நிலக்க ணுறைசுப் பிரமணி யானந்த நின்மலனே.”

[மும்மல நோய் கெடும்படி ஞானாசிரியனாக உலகத்தில் தங்குகின்ற சுப்பிரமணிய தேசிக, இலக்கணத்திற் சொல்லப்படும் எழுத்தாகிய மெய்க்கு அரை மாத்திரை கால அளவு. இப்போது அந்த அளவு கூடத் தம் மெய்களுக்கு இல்லாமல் விசபேதியாகிய மலநோயால் பலர் இறந்தனர். இந்நோயை விலக்கத் திருவருள் புரிய வேண்டும்.]

அவ்விண்ணப்பத்தைப் பெற்ற தேசிகர் பணம் கொடுத்து மருந்தை ஏராளமாக வாங்கச் செய்து கிராமந்தோறும் அனுப்பிக் கிராம முன்சீபுகளைக்கொண்டு விநியோகிக்கும்படி செய்தனர்.

என் தாய், தந்தையர் என்னைப்பற்றிக் கவலையடைவார்களென்ற எண்ணத்தால் நான் சௌக்கியமாக இருப்பதைக் கடித மூலம் அவர்களுக்கு அடிக்கடி தெரிவித்துவந்தேன்.

சீகாழி வட்டத்தில் இடமணலென்னும் சிற்றூரில் என் சிறியதாயாராகிய மீனாட்சி அம்மாளின் கணவர் கருணமாக வேலை பார்த்து வந்தார். அவர் பெயர் சுந்தரமையர் என்பது. சாந்தமான இயல்பும் சுறுசுறுப்பும் உடையவர் அவர்; சங்கீத ஞானம் உள்ளவர்; சிவபக்திச் செல்வர். திருவாவடுதுறையில் அக்காலத்தில் கருணமாக இருந்தவர் வேறு சிற்றூருக்குப் போகவேண்டு மென்ற நோக்கத்தோடு இருந்தார். என் சிறிய தந்தையார் திருவாவடுதுறைக்கு வர விரும்பினார். இவ்விருவரும் கலந்து பேசித் தம் இடங்களைப் பரிவர்த்தனை செய்துகொண்டார்கள். இந்த ஏற்பாட்டால் என் சிறிய தந்தையார் திருவாவடுதுறைக்குத் தம் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். அதற்கு என் முயற்சியும் காரணமாக இருந்தது.

அவர் திருவாவடுதுறைக்கு வந்தபோது, “இனி யாதொரு கவலையுமின்றிச் சரியான வேளையில் ஆகாரம் செய்துவிட்டு இவர்களுடைய பாதுகாப்பில் இருந்து வரலாம்” என்று எண்ணினேன். அவர்கள் வீட்டிலே போசனம் செய்துவரலானேன்.

மடத்திலிருந்து அவ்வப்போது வேண்டிய பொருள்கள் அவ்வீட்டிற்கு வரும். அவற்றைக் கண்டு என் சிறியதாயார் என்னைப் பாராட்டுவார். என் தாயாருக்கு என்பாலுள்ள அன்பு அவருக்கும் இருந்தது. ஒரு வித்தியாசம் மாத்திரம் உண்டு. என் அன்னையார் என்னைச் சில சமயங்களில் கடிந்துகொள்வார். சிறிய தாயாரிடம் நான் வெறுப்புக்குறிப்பை என்றும் கண்டதில்லை. குளிர்ந்த நேரத்தில் நினைத்துப் போற்றுவதற்குரிய உத்தமர்களில் அவர் ஒருவர். பொறுமை என்பது அவருக்கு ஓர் ஆபரணம்.

என் சிறிய தந்தையாரும் என்பால் அன்பாகவே இருந்தார். அவருண்டு; அவர் வேலையுண்டு; புற விசயங்களில் அவர் தலையிடார். மடத்தின் நிலங்களே உள்ள அந்தக் கிராமத்தில் அவர் உத்தியோகம் பார்த்தாலும் வலிந்து மடத்திற்குச் சென்று ஆதீனகர்த்தரோடு பழகிப் பிரியம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இப்படி இருந்ததனால் மடத்தைச் சார்ந்தவர்கள் அவரிடம் மதிப்போடு பழகினார்கள்.

எங்கள் ஆசிரியர் கம்பராமாயணப் பாடம் சொல்லி வந்தார். இராமாயணத்தின் இணையற்ற சுவையும் அவருக்குத் தமிழில் இருந்த அன்புமே அப்பாடம் நடைபெறுவதற்குக் காரணம். இல்லையெனில் அந்நிலையில் ஆசிரியர் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லவே இயலாது. அவர் தேகம் அவ்வளவு தளர்ச்சியை அடைந்திருந்தது. பித்தப்பாண்டு என்னும் நோய் அவரைப் பற்றிக்கொண்டது. அவர் பாதத்தைப் பிடித்து வயிற்றையும் வீங்கச்செய்தது. அடிக்கடி சோர்வும் இளைப்பும் உண்டாயின.

இயல்பாகப் பாடஞ் சொல்லும் ஊக்கம் அவருக்கு அப்போது இல்லை. தினந்தோறும் நூறு அல்லது நூற்றைம்பது செய்யுட்கள் நடைபெற்றன. ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருள் சொல்லவில்லை. நாங்கள் படித்துக்கொண்டே போவோம். இடையிடையே நயமான பகுதிகளுக்கே குறிப்பாகப் பொருள் சொல்லுவார். எங்களுக்குப் பாடஞ் சொல்லுவதென்பது பெயரளவில் இருந்தது; ஆனால் அவர் அவற்றைப் பூரணமாக அனுபவித்தார். இராமாயணப் பாடல்கள் அவர் தளர்ந்த நிலையில் மருந்தாக உதவின.

இடையிடையே கம்பரது வாக்கைப் பாராட்டி உருகுவார். சில பாடல்களை மீண்டும் மீண்டும் பலமுறை படிக்கச் சொல்வார். அவற்றை விளக்கிச் சொல்லி இன்ன இன்ன நயங்கள் உள்ளனவென்று எடுத்துக்காட்டுவதைவிடப் பல முறை படிக்கச்செய்து கேட்டு அனுபவிப்பதில் அதிக இன்பம் அவருக்கு இருந்தது. சில பாடல்களுக்கு அவர் வார்த்தைகளால் பொருள் சொல்லவில்லை; கண்ணீர்விட்டு உருகி நின்ற அவர் மெய்ப்பாடுகள் உரை கூறின. “இனிமேல் இப்படி யார் பிறக்கப் போகிறார்கள்? என்ன அழகு! என்ன அழகு! யோசித்துப்பாடிய பாட்டுக்களா இவை? இயற்கையாக வருகிற வாக்கின் நயந்தான் எப்படி இருக்கிறது!” என்பார். கம்பர் பாடலை நாமும் உணர்ந்து இன்புறுகிறோம்; அவரும் உணர்ந்து அனுபவித்தார். ஆனால் கவிஞராகிய அவர் பெற்ற அனுபவம் நமக்கு இருக்குமோ என்பது சந்தேகந்தான். கவிஞன் உள்ளத்தைக் கவிஞன் உணரும்முறையே வேறுபோலும்!

கம்பரை ஆசிரியர் பாராட்டும்போதெல்லாம் நான் கம்பரைக் காட்டிலும் ஆசிரியரைப் பற்றியே அதிகமாக நினைப்பேன். “இப்பெரிய நூலை முன்பே கேளாமற் போனோமே!” என்ற வருத்தம் உண்டாகும். “இவர்களுக்கு இவ்வியாதி வந்திருக்கிறதே; எப்படி முடியுமோ!” என்ற பயமும் என் மனத்தை அலைத்து வந்தது.

இவ்வாறு நோயினால் ஆசிரியர் வருந்தினாலும் அவருடைய கவியாற்றல் மெலிவுறவில்லை. திருவிடைமருதூர் தல விசயமாக ஒரு திரிபந்தாதியை அவர் இயற்றத் தொடங்கினார். ஆதீனத்தார் விரும்பியபடி சிரீ சிவஞான யோகிகள் சரித்திரத்தை விரிவாகச் செய்யத் தொடங்கினார். இவ்விரண்டு நூல்களில் திரிபந்தாதி மாத்திரம் பூர்த்தியாயிற்று. சிவஞான யோகிகளிடத்தில் அவருக்கு அளவற்ற அன்பு இருந்தது. அதனால் அவர் சரித்திரத்தை ஒரு காவியம்போல அமைக்க எண்ணி நாடு, நகரச் சிறப்புக்களைப் பாடத்தொடங்கினார், திருவாவடுதுறையின் பெருமைகளையும் ஆதீன குரு பரம்பரையின் சிறப்பையும் நன்றாகப் பாடவேண்டுமென்பது அவர் அவா. இவ்வளவு பெரிய அசுத்திவாரத்தோடு ஆரம்பித்த அது நிறைவேறாமற்போயிற்று.

ஆசிரியர் நோயால் துன்புறுவதை அறிந்த சுப்பிரமணிய தேசிகர் அவரைத் திருவிடைமருதூருக்குத் தக்க சௌகரியங்களுடன் அனுப்பி அங்கே உள்ள கட்டளைமடத்தில் இருந்துவரச் செய்தனர். திருவிடைமருதூர் அரண்மனை வைத்தியராக இருந்த சேசாசல நாயுடு என்பவர் அவருக்கு மருந்து கொடுத்துவந்தார். ஆலயத்திற் பீடா பரிகாரமாக அருச்சனை முதலியன நடந்தன.

நானும் வேறு மாணாக்கர்களும் திருவாவடுதுறையிலே இருந்தோம். ஒருநாள் விட்டு ஒருநாள் நாங்கள் திருவிடைமருதூருக்குப் போய் ஆசிரியரைப் பார்த்துவந்து சுப்பிரமணிய தேசிகரிடம் அவரது நிலைமையைத் தெரிவிப்போம்.

(தொடரும்)