Monday, July 06, 2009

உலகப் பெருந்தமிழர்








தமிழ் ஆய்வுகளை உலகளாவிய வகையில் நெறிப்படுத்தவும் உயர்த்தவும் இடையறாமல் முயற்சி செய்த மூத்த தமிழறிஞர், முதுமுனைவர் வ.அய். சுப்ரமணியத்தின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் தமிழ் வளர்ச்சிக்குச் சிறப்பாகத் தொண்டாற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சி நெறிமுறைகளில் முதிர்ச்சியும், சிந்தனையும் செயலும் தமிழுக்காகவே அமைத்துக்கொண்ட தகைமையும் நிறைந்தவர் வ.அய். சுப்ரமணியம். உலக அளவில் பல்வேறு மொழி ஆய்வுகளில் நிலவி வரும் புதிய போக்குகளையும் நெறிகளையும் உணர்ந்து அறிந்து நமது மொழியின் ஆய்வுகளில் புதிய வழி காண உதவியவர். ஈழத் தமிழறிஞரான முனைவர் தனிநாயகம் அடிகளோடு இணைந்து நின்று உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தை உருவாக்கி அதன் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்து பல்வேறு நாடுகளில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறுவதற்கும் உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வந்த தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைப்பதற்கும் அவர் ஆற்றிய தொண்டு என்பது மகத்தானது. தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்ற உலகத் தமிழர்களின் நீண்ட காலக் கனவு நனவானபோது அதன் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்று தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு தொலைநோக்குடன் திட்டவட்டமான வடிவம் கொடுத்த பெருமை அவரையே சாரும். அவர் பதவி வகித்த 5 ஆண்டு காலத்திற்குரிய வேலைத் திட்டத்தை வகுத்து அதை அச்சிட்டு அனைவருக்கும் வழங்கி அதன்படி செயல்பட்டவர் அவர். மற்றவர்களையும் செயல்பட வைத்தவர். தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அமைந்திருக்கும் தமிழ்த்துறைகள் செய்து வரும் தமிழ் ஆய்வுகளை நெறிப்படுத்தவும் முறைப்படுத்தவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்பட்டன. அவர் துணை வேந்தராக இயங்கிய 5 ஆண்டு காலத்தில் அப் பல்கலைக்கழகத்திற்கு உலக அளவில் பெருமையைத் தேடிக் கொடுத்தார். அரசிடம் இருந்து ஆயிரம் ஏக்கருக்குக் குறையாத நிலத்தைப் பெற்று அதில் கட்டடங்களை அனைவரும் வியக்கும் வண்ணம் எழுப்பி அவர் ஆற்றிய சாதனை வேறு யாராலும் செய்யப்பட முடியாதது மட்டுமல்ல இன்றளவும்கூட அதை விஞ்சும் சாதனையை யாரும் செய்யவில்லை. திறமை உள்ளவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களை இனம் கண்டறிந்து பல்கலைக்கழகத்திற்கு வரவேற்றுப் போற்றினார். திருவனந்தபுரத்தில் திராவிட மொழியியல் நிறுவனம், பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளி, இந்திய மொழியியல் நிறுவனம், இந்திய நாட்டுப்புறவியல் நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளைத் தழைக்கச் செய்தவர் அவர். என்னுடன் படித்த மாணவ நண்பர்கள் அவரிடம் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டிருந்தபோது திருவனந்தபுரத்தில் முதன்முதலாக அவரைச் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே அவருடைய ஆளுமை என்னை முழுமையாக ஆட்கொண்டது. 1976-ம் ஆண்டில் அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். திராவிட மொழியியல் பள்ளிக்கு தென்னாட்டில் உள்ள அரசுகளின் நிதி உதவி மிக இன்றியமையாதது. அது கிடைக்க உதவும்படி வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க கர்நாடகத்தின் முதலமைச்சர் தேவராஜ் அர்ûஸயும், ஆந்திர முதலமைச்சராக இருந்த சென்னா ரெட்டியையும் சந்தித்து விவரத்தை எடுத்துக்கூறி அவர்களும் அந்தப் பள்ளி இயங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து நிதி உதவி அளிக்க முன்வந்தார்கள் என்பதே உண்மையாகும். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராக நான் இருந்த காரணத்தினால் காங்கிரஸ் முதலமைச்சர்களையும் உரிமையோடு வேண்டிக்கொள்ள முடிந்தது. நான் செய்த இந்தச் சிறு உதவியை மதித்துப் போற்றிய பேருள்ளம் அவருக்கு இருந்தது. எதுவாக இருந்தாலும் தொலைநோக்கு, செயல்திறன், செய் நேர்த்தி ஆகியவை அவரின் சிறந்த குணநலன்கள் ஆகும். ஒருமுறை தில்லி சென்றிருந்த நான் பழைய புத்தகக் கடை ஒன்றின் தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியர்கள் என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த ஆங்கில நூல் ஒன்றினை வாங்கினேன். இந்நாடுகளில் ஆங்கிலேய ஆட்சியினரால் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ரப்பர் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவற்றில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து 1950-களின் தொடக்கத்தில் தில்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். இக்கருத்தரங்கை முனைவர் கே.எஸ். சாந்து நடத்தியிருந்தார். நான் தஞ்சைக்குச் சென்று துணைவேந்தர் வ.அய். சுப்ரமணியத்தைச் சந்தித்து அவரிடம் இந்த நூலினைக் கொடுத்தேன். தென் கிழக்காசிய நாடுகளில் குடியேற்றப்பட்ட இந்திய மக்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு இந்த நூலில் இல்லை. எனவே இந்நாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து முழுமையான செய்திகள் தொகுக்கப்பட வேண்டும். இந்தப் பணியினை தங்கள் பல்கலைக்கழகமே செய்வதுதான் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று கூறினேன். அவரும் மிக்க மகிழ்ச்சியுடன் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். ஏற்றதோடு நிற்கவில்லை. தில்லியில் கருத்தரங்கினை நடத்திய கே.எஸ். சாந்துவைக் கண்டுபிடித்து தஞ்சைக்கு வரவழைத்து இந்தக் கருத்தரங்கில் கட்டுரைகள் வாசித்த அறிஞர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து மேற்கொண்டு ஆற்ற வேண்டியதை அவர் செய்தார். பல்வேறு நாடுகளுக்கும் பல்கலைக்கழகத்தின் சார்பில் பல பேராசிரியர்களை அனுப்பி தமிழர்கள் பற்றிய செய்திகளை எல்லாம் தொகுத்து நூல்களாக வெளியிட ஏற்பாடு செய்தார். தமிழ்நாட்டிலுள்ள உள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோரை அவ்வப்போது கூட்டிக் கருத்தரங்குகள் நடத்தி ஒருமுகப்படுத்தினார். இதற்கு முன் யாரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை. அதுமட்டுமல்ல. இலங்கை தமிழ் அறிஞர்களின் உயிருக்கே அபாயம் ஏற்பட்ட காலகட்டத்தில் அவர்களில் பலரை வருகைப் பேராசிரியர்களாக அழைத்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணிகளைத் தொடர்வதற்கு உதவினார். அதைப்போல ஈழத்தமிழ் மாணவர்களுக்கும் இங்கு கல்வியைத் தொடர வழிவகை செய்தார். யாழ் நூலகம் சிங்கள வெறியர்களால் கொளுத்தப்பட்டு விலைமதிக்க முடியாத நூல்களெல்லாம் தீக்கிரையான செய்தி கேட்டு வேதனை அடைந்த அவர், உடனடியாக பல்கலைக்கழக நூலகத்திலுள்ள முக்கியமான நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் மைக்ரோ பிலிம் எடுத்து யாழ் நூலகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். ஈழத் தமிழர்களின் துயரம் துடைப்பதற்கு அவர் வரம்புக்குட்பட்ட எல்லாவற்றையுமே செய்தார். காவிரிப் பிரச்னை முற்றிய காலகட்டத்தில் கர்நாடக அரசு அப்பிரச்னை குறித்து தமிழில் தனது தரப்பு நியாயங்களை விளக்கி ஒரு நூலினை அச்சடித்து காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கியது. அப்போது தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சங்க இலக்கியத்திலும் மற்றும் பின்னர் எழுந்த இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் காவிரி குறித்து வெளியான செய்திகள் அத்தனையும் தொகுத்து நூல் ஒன்று வெளியிட இவர் ஏற்பாடு செய்தார். இதன் விளைவாக காவிரி நீர் மீது நமக்குள்ள நியாயமான உரிமை இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு மேற்பட்டது என்பது நிலைநாட்டப்பட்டது. தொடக்கப் பள்ளியில் கூட தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த அரசே தயங்கி வரும் சூழ்நிலையில் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளைத் தமிழிலேயே நடத்தத் துணிந்து திட்டமிட்டார். அறிஞர்கள் பலரைக் கூட்டிவைத்து அதற்கான நூல்களை உருவாக்கினார். ஆனால் தமிழக அரசின் அனுமதி கிடைக்காததால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ்ச் சுவடிகள், தமிழர்கள் குறித்த கல்வெட்டுகள் பட்டயங்கள் போன்றவற்றினை எல்லாம் சேகரிக்க பெரு முயற்சி செய்தார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற இந்திய அலுவலக நூலகத்தில் உள்ள ஆவணங்களை மைக்ரோ பிலிமில் பதிவு செய்து பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாப்பாக வைத்தார். இந்தியாவின் வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் இந்த ஆவணங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் வாழ்ந்து மறைந்த புலவர்களின் வீடுகளுக்கு எல்லாம் ஆள் அனுப்பி ஓலைச்சுவடிகளைச் சேகரித்து பல்கலைக்கழகத்தில் பத்திரப்படுத்தினார். தமிழரின் பழமையும் பெருமையும் அகழ்வாராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படும் என்பது எவ்வளவு உண்மையானதோ அதைப்போல தமிழகத்தைச் சுற்றியுள்ள கடலில் அகழ்வாய்வு செய்து பல புதிய உண்மைகளைக் கொண்டு வருவதற்காக நீர் அகழ்வாய்வு நிறுவனத்தை ராமேசுவரத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் நிறுவினார். இதன் மூலம் மறைந்த பூம்புகார் பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவருடைய பணி நிறைவடைவதற்கு முன்பாகவே அவர் பதவி விலக நேரிட்டது ஒரு பேரிழப்பாகும். அதற்கான காரணங்களை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. அவர் அப்பதவியில் தொடர்ந்திருந்தால் பல்கலைக்கழகம் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக உருவெடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 1997-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக அவர் பணியாற்றினார். அப்போது திராவிட மொழிகளில் அகராதி ஒன்றினைத் தொகுக்கும் திட்டத்தை வகுத்துத் தக்க அறிஞர்களைக்கொண்டு நிறைவேற்றினார். அந்தத் திட்டத்திற்கு உதவ வேண்டுமென்று மத்திய அரசை வேண்டிக்கொள்வதற்காக தில்லி சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைச் சந்தித்தபோது அவருக்குத் திராவிட மொழிகள் அகராதியை அளித்தார். அதை உள்ளே கூட புரட்டிக் பார்க்காமல் தலைப்பை பார்த்த உடனேயே தனது வெறுப்பை அந்த அமைச்சர் வெளிக்காட்டினார். திராவிடம், திராவிட மொழிகள் என்று எதுவும் கிடையாது. எல்லாம் அன்னிய ஆட்சியினரின் சூழ்ச்சி என்று பேசினார். இத்திட்டத்திற்கு அவர் நிச்சயமாக உதவப் போவதில்லை என்று தெரிந்தபோது வ.அய். சுப்ரமணியம் எழுந்து ""அப்படியானால் இந்தியாவின் தேசிய கீதத்தில் திராவிட என்ற சொல்லையே எடுத்துவிடுங்கள்'' என்று கூறிவிட்டு வெளியேறினார். அமைச்சரோ திகைத்துப் போனார். யாருக்கும் அஞ்சாமல் தனது கருத்தினைத் துணிந்து சொல்லும் குணநலன் அவருக்கே உரியது. தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக்கொண்ட இந்த அறிஞரின் பெருமைகளை உணர்ந்து உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டம் உள்பட உயர்ந்த விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன. 2005-ம் ஆண்டில் உலகத் தமிழர் பேரமைப்பு நாகர்கோயிலில் நடத்திய மாநாட்டில் இவருக்கு உலகப் பெருந்தமிழர் எனும் விருதினை வழங்கிற்று. சென்ற ஆண்டு சென்னையில் உள்ள உலகத்தமிழர் பேரமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தார். நானும் மற்ற நிர்வாகிகளும் கூடி மகிழ்ச்சியுடன் வரவேற்றோம். உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாட்டின் மலர்களைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார். ""நல்ல ஆய்வுக் கட்டுரைகளுடன் சிறப்பாக மலர் வெளிவந்திருக்கின்றன. எனக்கொரு யோசனை உள்ளது. அதை நிறைவேற்றும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் முன்பு பஹம்ண்ப் இன்ப்ற்ன்ழ்ங் என்ற பெயரில் ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்ட இருமொழி காலாண்டிதழை வெளியிட்டோம். உலகம் முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அவை அனுப்பப்பட்டு வந்தன. அதைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை. உலகத் தமிழர் பேரமைப்பு அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்'' என அவர் கூறியபோது ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் திகைப்பும் எங்களை ஆட்கொண்டன. ""உங்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவது எங்கள் கடமையாகும். ஆனால் அந்த இதழுக்கு பெருமைதரு ஆசிரியராக தாங்கள் இருந்தால் மட்டுமே அதை நாங்கள் செய்வதற்கு இயலும்'' என நான் கூறியபோது அதற்கு அவர் ஒப்புதலும் அளித்தார். அவரின் இந்த விருப்பத்தினை நாங்கள் நிறைவேற்றுவதற்குள் அவர் மறைந்தது தாங்கொணாத் துயரமாகும். எல்லா வகையிலும் அடக்கமாக தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய இந்த உலகப் பெருந்தமிழர் மறைவு நமக்கு சொல்லொண்ணாத இழப்பாகும். தஞ்சையில் அமைக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமாக உயர்ந்தோங்க வேண்டும் என்பதே அவரின் ஒரே நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும்.

No comments: