Monday, April 05, 2010

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... நாவலர் சோமசுந்தர பாரதியார்

வ.உ.சி.,யால் 'தமிழ்க் கப்பல்' என்று வர்ணிக்கப்பட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 - 1959). வழக்கறிஞராகப் பணியாற்றி மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தவர். வ.உ.சி.,யின் அழைப்பை ஏற்று மாதம் 100 ரூபாய் ஊதியம் பெற்று கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தார். தேசப்பற்று காரணமாக அவர் அதை செய்தார்.இந்தி எதிர்ப்புத் தந்தை என்று இவரைக் குறிப்பிட்டால் மிகையில்லை. ராஜாஜி இந்தியை தேசிய மொழி என்ற போது, நாவலரோ 'இந்தி தேசிய மொழியா' என்று கேள்வி எழுப்பி புத்தகம் வெளியிட்டார். சிறிய நூல் என்றாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கட்டாய இந்தி திணிப்பு, தமிழ் மொழிக்கு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு வெளிப்படையான கடிதம் எழுதினார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மறைமலை அடிகள்

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்... உற்ற தேகத்தை உடல் மறந்தாலும்... எனும் வள்ளல் ராமலிங்க அடிகளாரின் பாடலை பாடிக் கொண்டிருந்த மறைமலை அடிகளார் (1876-1950), இடையில் நிறுத்தி - 'உற்ற யாக்கையை உடல் மறந்தாலும்' என்று பாடியிருந்தால் சிறப்பாக இருக்குமே என்று கருதினார். தேகம் என்ற வடமொழிச் சொல் நீங்கி, யாக்கை எனும் தூய தமிழ் சேரும் என்பதால் மகிழ்வுற்றார். அந்த தினத்திலிருந்து வேற்று மொழி கலவாமல் தமிழ் பேசுவோம் என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார். இதுவே, அவரது தனித்தமிழ் இயக்கத்தை வலுவூட்டியது. சுவாமி வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் என்றிருந்த அவரது அமைப்பை 'பொது நிலைக்கழகம்' என்றும் மாற்றிக் கொண்டார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் (1876-1954) சொற்பொழிவுகளும், உரைநடைகளும் 'கவிமணியின் உரைமணிகள்' என நூல் வடிவம் பெற்றன. உமார்கய்யாம், ஆசியஜோதி ஆகியன இவரது மொழிபெயர்ப்புப் பாடல்கள். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் எனும் பழமைவாதத்துக்கு எதிராக கவிதை பூண்டவர் கவிமணி. கவிதைக்கு இலக்கணம் சொன்ன கவிமணி... கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்...


உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை.
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அறிவோம்... அறிஞர் கால்டுவெல்

உலக மொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் லத்தீனும்தான் செம்மொழியாகக் கருதப்பட்டன. கி.பி. 1800 1900களில் வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் உள்ளிட்டோர் சமஸ்கிருத படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்டனர். இது சமஸ்கிருதத்தை செம்மொழியாகக் ஏற்கும் நிலை உருவானது.

1816ல் எல்லிஸ் எனும் அறிஞர் தென் மாநில மொழிகள் வடமொழி அல்லாத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை நிரூபித்தார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றில் தமிழ், வடமொழியினின்று தனித்து இயங்கும் ஆற்றலை நிரூபித்தார். தமிழ் மொழி செம்மொழி ஆவதற்கு இதுவே முக்கிய காரணம்.

++++++++++++++++++++++++++

அறிவோம்... உயர்தனிச் செம்மொழி

அறிஞர் ராபர்ட் கால்டுவெல், வடமொழியிலிருந்து, தென் மொழிகள் தனித்து நிற்கக் கூடியவை என்று நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் எழுதிய ' தமிழ் மொழியின் வரலாறு' எனும் நூலில் தமிழ் மொழி உயர் தனிச் செம்மொழி கருத்தினை வலியுறுத்தவும் காரணமாக அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து மறைமலை அடிகளார் தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார்.
++++++++++++++++++++++++++

அறிவோம்... மாதவ சிவஞான முனிவர்

அறிஞர் கால்டுவெல், வடமொழி மற்றும் தென் மொழி ஆய்வுக்கு முன்பே, வடமொழியில் காணப்படாத தமிழ் மொழியின் தனி இயல்புகளை வடமொழியில் புலமை பெற்ற தமிழறிஞர்கள் கண்டறிந்தனர். அவர்களில் மாதவ சிவஞான முனிவர் முதன்மையானவர். இதுபோன்ற ஆய்வுகள்தான் தமிழ் மொழியினை செம்மொழி என்று நிலை நாட்டுவதற்கு அடிப்படையான காரணங்களாக அமைந்தன.
+++++++++++++++++++++++++++

அறிவோம்... வேதங்களிலும் தமிழ்

இந்திய மொழிகளில் தேர்ச்சிப் பெற்ற, பேராசிரியர்கள் டி.பர்ரோ, எம்.பி.எமனோ வடமொழி வேதங்களில் தமிழ்ச் சொற்களை கண்டறிந்து வெளியிட்டனர். கிரேக்கம், ஹீப்ரு, சீனம், ஜப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் காணப்படுவதை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இது பல்வேறு நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத் தொடர்பை வெளிக்காட்டுகிறது. நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சி அறிஞர்களும் நிரூபித்துள்ளனர்.

இயல், இசை, நாடகம் என எந்த வடிவில் இருந்தாலும், தமிழின் சுவை குறைவதில்லை. ஆடலும், பாடலும் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த கலை வடிவங்கள்.
++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வீரமாமுனிவர்

தமிழில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் பெஸ்கி பாதிரியார் (1680- 1746) இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பொருட்டு, 1710ம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்தார். தமிழின் மீது இருந்த பற்றால் தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். திறக்குறளை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்.

++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறுமுக நாவலர்

தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் திறம் பெற்றவர் ஆறுமுக நாவலர் (1822 1879). யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பாதிரியார் பீட்டர் பெர்சிவல் பைபிளை தமிழில் மொழிமாற்றம் செய்ய இவரிடம் கோரினார். இப்பணிக்கு ஆறுமுக நாவலரே தகுதியுடையவர் என்று அவர் தீர்மானித்தார். சைவ சிந்தாந்தத்தில் கைதேர்ந்த ஆறுமுக நாவலரின் பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர்களை வியப்புறச் செய்தது. தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களை அச்சேற்றியவர் ஆறுமுக நாவலர்.

+++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... உ.வே.சா.,

தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, உ.வே.சாமிநாத அய்யர் (1855-1942), அழியும் நிலையில் இருந்த, பண்டைய இலக்கிய நூல்களைத் தேடி அச்சிட்டு தமிழின் தொன்மையையும் புகழையும் உலகறியச் செய்தார். 90 புத்தகங்களுக்கு மேல் அச்சிட்ட இவர், 3 ஆயிரம் ஏட்டுச்சுவடி, கையெழுத்தேடுகளையும் வைத்திருந்தார்.
சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமையை முழுதாக உணர்ந்ததால், இது போன்ற அரிய படைப்புகளை அழிய விடாமல் காக்க வேண்டும் என்று உறுதி கொண்டார். சீவக சிந்தாமணிக்குப் பின்னர், பத்துப்பாட்டு நூலையும் இவர் வெளியிட்டார்.
++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சோழவந்தான் அரசஞ் சண்முகனார்

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய அரசஞ் சண்முகனார் (1862-1909), பள்ளியில் ஆங்கில வகுப்புகளை அதிகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளியேறினார். தலைமை ஆசிரியர் எவ்வளவோ முயன்றும், மீண்டும் பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டார். மதுரை பாண்டித்துரைத் தேவர், நான்காவது தமிழ்ச்சங்கத்தில் பணியாற்ற அழைத்தார். 1902 முதல் 1906 வரை நான்காண்டுகள் அச்சங்கத்தில் அரும்பணி ஆற்றினார். சிதம்பர விநாயகர் மாலை எனும் நூல் இவரால் இயற்றப்பட்டது.

++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சங்கரதாஸ் சுவாமிகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே, ஆங்கில மோகத்தில், தமிழில் பேசுவது கூட கவுரவக் குறைவு என்று கருதிய போது, சங்கரதாஸ் சுவாமிகள் (1866 - 1931) மேடைகளில் தமிழ் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டார். அப்போது இசையரங்குகளில் தெலுங்கு ஆதிக்கம் இருந்தது. இனிய செந்தமிழ்ப் பாடல்களை இவர் இயற்றி, தமிழுக்குப் பெருமை சேர்த்தார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவரது, பாடல்களை, வசனத்தை உச்சரிக்காத நடிகர்கள் இல்லை என்று கூறலாம். தூத்துக்குடியில் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், மதுரையில் 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' நாடக சபா மூலம் அற ஒழுக்கத்தையும் கடவுள் உண்மையையும் வளர்த்தார்.

++++++++++++++++++++

பரிதிமாற் கலைஞர்

கல்லூரியில் படிக்கும் போதே, ஆசிரியர்களால் வியந்து பாராட்டப்பட்டவர் சூரியநாராயண சாஸ்திரி (1870-1903). மதுரைக் கல்லூரியில் இவர் படித்த போது, இயற்றிய மாலா பஞ்சகம் என்ற நூலை பார்த்த பாஸ்கர சேதுபதி, அவருடைய உயர்கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டார்.சென்னை கிறிஸ்தவ கல்லூரி தலைவர் டாக்டர் மில்லர், டென்னிசன் இயற்றிய ஆர்தரின் இறுதி எனும் நூலின் ஒரு பகுதியை விளக்கினார். 'துடுப்புகள் இருபுறமும் தள்ள, நீரில் மிதந்து செல்லும் படகு, அன்னப்பறவை தன் சிறகு விரித்து விசிறிக் கொண்டு நீந்துவது போல் இருக்கிறது' என்ற உவமை வேறு எந்த மொழியிலும் இடம் பெற்றிருக்குமா என்பது சந்தேகம், என்றார்.வகுப்பில் இருந்த சூரிய நாராயண சாஸ்திரி, 'முடிகின நெடுவாய் முரிதிரை நெடுநீர்வாய்க் கடிதினின் மடவண்ணக் கழியது செல நின்றார்' எனும் 9 நூற்றாண்டுக்கு முந்தைய கம்பரின் உவமை நயத்தை டென்னிசனுக்கு,சாஸ்திரி விளக்கினார். அதைக்கேட்ட மில்லர் அவருக்கு கைகொடுத்துப் பாராட்டினார். மதுரை அருகே வீராச்சேரியில் பிறந்த அவர், கல்லூரி பேராசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியராகவும் விளங்கிய அவர், தனித்தமிழ் உணர்வுக்கு வித்திட்டவர் ஆவார். தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது என்று உரை நிகழ்த்தினார். எழுதி வந்தார். தன்னுடைய பெயரையும் தூய தமிழில் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்.

+++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாம்பன் சுவாமிகள்

முருகப்பெருமான் மீது பாட வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பாம்பன் சுவாமிகள் (1851-1929) பாடிய 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்' பாடினார்.சிவஞான தீபம் வேதாந்த சித்தாந்தப் பாட்டினை திறம்படவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் நூல் 1922 அச்சிடப்பட்டு வெளியானது. ஆயிரத்து 101 பாடல்களுக்கு பாம்பன் சுவாமிகளே உரை எழுதி 'திட்பம்' என்று பெயர் சூட்டி வெளியிட்டார்.ராமநாதபுரம் பாம்பனில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே ஏட்டில் முருகப்பெருமான் பற்றி பாடல்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வடசொல் இல்லாத 'சேந்தன் செந்தமிழை' இவர் படைத்தார்.

++++++++++++++++++++++++++

நா.கதிரைவேற்பிள்ளை

நா.கதிரைவேற்பிள்ளை (1874-1907) யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் வந்து, தமிழ்ப்பணிக்கும் சைவப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இரு மொழி அகராதி இருந்தபோதிலும், தமிழுக்கு ஒரு மொழி அகராதி வெளிவராமல் இருந்தது. அந்த குறையை போக்கும் வண்ணமாக அவர் வெளியிட்ட அகராதி, தமிழ் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கதிரைவேற்பிள்ளையின் 'சுப்பிரமணிய பராக்கிரமம்' என்ற நூலின் அடிப்படையில் தான் பழநி தண்டாயுதபாணி கோயிலில் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தலப்புராணங்களை இவர் இயற்றியுள்ளார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராகவும் அவர் இருந்துள்ளார்.

+++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.உ.சிதம்பரனார்

பாரதியின் 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள், தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புது நூல்கள், தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்' என்பதற்கேற்ப வ.உ.சி., (1872-1936) ஜேம்ஸ் ஆலன் எழுதிய சில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.மனம்போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம் என பெயர்சூட்டி வெளியிட்டார். மூல நூல்களைப் போலவே இந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் படிப்பவர்களும் அருமையை உணர்ந்து கொள்ளலாம். திருக்குறளின் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் வ.உ.சி., சிறையிலிருந்த போது அதற்கு உரையும் எழுதினார். நெகிழ்ச்சியான கவிதைகளையும் அப்போது அவர் படைத்தார். செக்கிழுத்து சிறையிலிருந்து அவர் வெளியேறிய போது, சுப்பிரமணிய சிவா தவிர, அவரை வரவேற்க யாரும் வரவில்லை.

+++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பம்மல் சம்பந்த முதலியார்

எழுபது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி தமிழ் மக்களால் 'தமிழ் நாடகத் தந்தை' என்று அழைக்கப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964).வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டே, வாடி வதங்கிப் போய் இருந்த நாடகத் துறைக்கு புத்துயிர் ஊட்டியவர் இவர். மேலை நாட்டு நாடகங்கள், வடமொழி நாடகங்களை ஆழமாகப் படித்தார். மொழிநடை மற்றும் உரையாடல்களில் வித்தியாசமான பாணியைப் பின்பற்றினார். தொடர்ந்து நாடகக் கலைக்கு தெம்பூட்டி வந்தார். இவர் எழுதிய முதல் நாடகம் 'புஷ்பவல்லி' மக்கள் ஆதரவைப் பெற்றது. அதன் பின்னர் அவர் ஏராளமான நாடகங்களை எழுதிக் குவித்தார்.

++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... :சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

முகமதியப் புலவராக இருந்து, அனைத்து சமயத் தத்துவ ஆழங்களை உணர்ந்து உரைக்கும் செறிவு கொண்டவராக செய்குத்தம்பி பாவலர் (1874-1950) விளங்கினார்.கதராடை மற்றும் காந்தி குல்லாயும் அணிந்து, விடுதலை உணர்வையும் பரப்பினார். இசுலாமிய மித்திரன் எனும் இதழை நடத்தினார். சீறாப்புராணத்துக்கு உரை எழுதினார். அந்தாதிகள், கோவைகள், பாமாலை, மஞ்சரி, நீதி வெண்பா மற்றும் பல்வேறு உரைநடை நூல்களையும், ஆனந்த களிப்பு எனும் மொழிபெயர்ப்பையும், சாற்றுக் கவிகள், வாழ்த்துக்கவிகள், சிலேடைக் கவிகள், சீட்டுக் கவிகள் எனப் பன்னூறு பாக்களையும் அளித்துள்ள பாவலரின் பெருமை தமிழின் பெருமையாகவே உள்ளது.

++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... திரு.வி.க.,

பெரிய புராணத்துக்கு குறிப்புரையும் வசனமும் எழுதியவர் திரு.வி.க., (1883-1953). யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை மீது கொண்டிருந்த பற்றால், அவர் கதிரைவேற்பிள்ளை சரிதம் என்ற நூலை எழுதினார். பட்டினத்துப் பிள்ளையார் பாடல் திரட்டு, தேச பக்தாமிர்தம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், நாயன்மார் திறம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், முருகன் அல்லது அழகு, திருக்குறள் விரிவுரை, உள்ளொளி உள்ளிட்ட ஏராளமான படைப்புகளை வழங்கியவர். மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும். மேலும், மேலும் தமிழகத்துக்கு தொண்டாற்ற வேண்டும். தமிழர்களை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று கருதிய அவர் தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியாரை (1882-1921) அறியாத தமிழ் மக்கள் இருக்க முடியாது. தமிழ்ப் பணியையும் விடுதலைப் பணியையும் ஒன்றாக பார்த்த அவர், மொழிப்பற்றை வளர்த்தவர். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய மூன்று குறுங்காவியங்களை அவர் இயற்றினார். வ.வே.சு. ஐயர் இவரது பாடல்களை அட்சரம் லட்சம் பெறுமான பாக்கள்... அவை மனதை ஈர்க்கும் மாணிக்கங்கள் என பாராட்டினார். மகாகவி பாரதியார் ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியிடம் பேரார்வம் கொண்டிருந்தார். எங்கள் தமிழ்மொழி, எங்கள் தமிழ் மொழி என்று மொழியின் மீது தீராப்பற்றுக் கொண்டிருந்தவர் அவர்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை (1888 - 1972) தெய்வ பக்தியும் தேச பக்தியும் நிறைந்தவர். காந்தியக் கவிஞர் என்று போற்றப்பட்டவர். ''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது... சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்'' என்று பாடியவர். ''தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய மொழியாகும், அன்பே அவனுடை வழியாகும்'' என்று பாடியவர். தமிழருக்கும் விடுதலை வீரர்களுக்கும் பாடிப் பெருமை சேர்த்தவர் அவர். காவலரின் மகனாகப் பிறந்த கவிஞர், தமிழ்க் காவலராக விளங்கினார்.

++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்...வ.வே.சு. ஐயர்

தமிழில் திறனாய்வுத் துறை வளம் பெறவும், சிறுகதைத் துறை வளரவும் உந்து சக்தியாக விளங்கியவர் வ.வே.சு.ஐயர் (1881 -1925). புதுச்சேரியில் இவர் அமைத்த, கம்ப நிலைய இயக்கத்தில் பாரதியாரும் சேர்ந்தார். கம்ப நிலையத்திலிருந்து ஏராளமான நூல்கள் வெளியாகின. மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. தேச விடுதலைக்காக எழுதிய இவர், பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது, கம்பராமாயணம் குறித்த ஆங்கில திறனாய்வை எழுதினார். ஆங்கிலத்தில் குறுந்தொகையை எழுதினார். 44 வயதிலேயே அவர் மறைந்துவிட்டார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



இன்று ஏப்ரல் 13 
பெயர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,
பிறந்த தேதி : ஏப்ரல் 13, 1930

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்.
எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக்
கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய
சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை
ஆக்கப்பட்டுள்ளன. பாடல்கள் மூலம் சமூகத்தை
சீர்திருத்த முயன்ற உங்களுக்கு நன்றி.




5 comments:

vijay fan said...

nalla tamil katturai miga nalladhu tamilai valarpadhu..........

Karthik said...

Nanri aiyaa

Unknown said...

Arumai yaga erukirathu . Nandi

Unknown said...

Tq very much

Unknown said...

Thiruvarut Prakasa Vallalar Ramalinga Adigalar name is missed. why?