ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார்புகழ் வெல்க!
தமிழகத் தலைமைச் செயலகம் முதல்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரை இன்றைக்கு ஓரளவுக்காவது
ஆட்சிமொழி நிருவாகம் தமிழ்மொழியில் நடைபெறுவதற்கு மூல காரணமாகத் தமிழறிஞர்
ஒருவர் இருந்துள்ளார். அவரை இப்போது தெரிந்து கொள்வோம். அவர் பெயர்
கீ.இராமலிங்கனார்.
1956ஆம் ஆண்டில் மொழிவழி மாகாணமாகத்
தமிழ்நாடு உருவாக்கப்பட்ட போது ஆட்சிமொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும் பிரித்தானியரின் ஆங்கிலமொழியே
தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. நீண்ட காலத்திற்கு
முன்பே ஆங்கில அடிவருடிகள் சிலர் ஆங்கில மொழியில் எழுதுவது போலத் தமிழில்
எழுத முடியாது என்றும், தமிழில் வரைவுகளும், குறிப்புகளும் எழுதினால்
மற்றவர்களுக்குப் புரியாது என்றும் வாதாடி வந்தனர்.
தமிழ்நாட்டில் தமிழ்ஆட்சி மொழிச்சட்டம்
வந்த போதும் கூட இவர்கள் எள்ளி நகையாடுவதை நிறுத்திக் கொள்ள வில்லை.
அப்போது ‘தமிழால் முடியும்’ என்று ஆட்சிமொழிச் சட்டத்திற்கு
உயிரூட்டியவர்தான் தமிழறிஞர் கீ.இராமலிங்கனார்.
இவர் சென்னையிலிருந்து முப்பது கல்
தொலைவு கொண்ட ‘கீழச்சேரி’ எனும் சிற்றூரில் ஐப்பசி 28, 1920 /
12.11.1899ஆம் ஆண்டு இரத்தின முதலியார்- பாக்கியத்தமாள் இணையருக்கு மகனாகப்
பிறந்தார். பெற்றோர் இவருக்கு இராமலிங்கம் என்று பெயர் சூட்டினர்.
தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளியிலும்,
சென்னை சிவன் பள்ளியிலும் படித்த இராமலிங்கம் அதன் பிறகு 1924ஆம் ஆண்டு
வெசுலி கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் சேர்ந்து
இளங்கலை(சிற்றூரில்பி.ஏ.) பட்டம் பெற்றார். அப்போதே தமிழ்த் தென்றல்
திரு.வி.க., சைவ அடிகளார் சச்சிதானந்தம் ஆகியோரிடம் பாடம் கேட்டுத்
தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.
1924இல் சென்னை தலைமைச் செயலகத்தில் மேல்
நிலை எழுத்தராக பொறுப்பேற்றுக் கொண்ட போதிலும். தமிழின் மீதான ஈடுபாடு
குறைய வில்லை. 1934இல் புலவர் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழில் ஆற்றல்
மிகுந்த அறிஞராகத் திகழ்ந்தார். 1935இல் நகராட்சி ஆணையராக, சைதாப்பேட்டை,
பாளையங்கோட்டை, போடி நாயக்கனூர் ஆகிய நகரங்களில் பணியாற்றும் வாய்ப்பு
கிடைத்தது. அப்போது நகராட்சியின் தெருக்களுக்குத் தமிழ்ப் பெருமக்களின்
பெயர்களைச் சூட்டினார். இளங்கோ தெரு, தொல்காப்பியர் தெரு, அப்பர் தெரு,
சிலப்பதிகாரத் தெரு, மணி மேகலை தெரு என்று படிப்பறியா தமிழ் மக்களும்
உச்சரித்து அழைக்கும்படி செய்தார்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்
வருவதற்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சித்துறை சொற்களை அகரவரிசையில்
தொகுத்து ‘ஆட்சிச்சொல்’ (1940) என்ற பெயரில் நூலாக வெளியிட்ட பெருமை
இவருக்கே உண்டு. இவர் 1926இல் சார் பதிவாளராகப் பணியாற்றிய போதே
விற்பனை ஆவணங்கள் முழுவதும் தமிழ்மொழியில் எழுதும்படி தூண்டியதோடு, அவற்றை
எந்தவிதத் தடையுமின்றி பதிவு செய்திடவும் துணை நின்றார்.
ஆட்சிக்குரிய தமிழ்ச்சொற்கள் பற்றிய
ஆய்வுக் கட்டுரைகளை நூற்றுக்கும் மேல் ‘தமிழ்நாடு’ எனும் ஏட்டில்
எழுதினார். ‘ஆட்சிச் சொற்கள் சில’ எனும் பெயரில் அவற்றைத் தொகுத்து
மீண்டும் நூலாக வெளியிட்டார். 1958இல் ஆட்சிமொழித் தனி அலுவலராகப்
பொறுப்பேற்று ஆட்சித்தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கினார்.
இராமலிங்கனாருக்குத் ‘தமிழ்’ ஒரு கண்
என்றால், ‘சைவநெறி’ மற்றொரு கண்ணாகும். இவர் எழுதிய தமிழ் ஆட்சிச்சொற்கள்
(1959), ஆட்சிச் சொல் அகராதி (1958), ஆட்சித்துறைத் தமிழ் (1968),
ஆட்சித்தமிழ் (1976) தமிழில் எழுதுவோம் (1978) ஆகிய நூல்கள் தமிழுக்கு
மகுடம் சூட்டுபவை.
அதே போல், இவர் எழுதிய வழி காட்டும் வான்
பொருள், உண்மை நெறி விளக்கம், திருவெம்பாவை, ஐந்து நிலைகள் ஆகிய நூல்கள்
இறையியல் தத்துவங்களைத் தாங்கி நிற்பவையாகும்.
தமிழர் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும்
தமிழ்த் திருமணம், தமிழ் மணமுறை ஆகிய நூல்களும் கூட இவரால்
எழுதப்பெற்றதாகும். வைதீக நெறிச் சடங்குகள் தமிழர் பண்பாட்டிற்கு எதிரானவை
என்பதை அழுத்தந் திருத்தமாக இந்நூலில் விளக்கிடுவார்.
தமிழர் இல்லங்களில் ஆரியப் புரோகிதரின் சமசுகிருத மொழியை ஏற்கக் கூடாது என்பதைப் பின்வருமாறு கூறுகிறார்;
“தாயை
நீக்கி ஒருவன் மணஞ் செய்து கொள்வானாயின் அவனை எங்ஙனம் உலகம் பழிக்குமோ
அங்ஙனமே தாய்மொழியை நீக்கி மணஞ்செய்து கொள்வோர்களைத் தெய்வமும் தமிழினச்
சான்றோர்களும் பழிப்பர் என்று தமிழர்கள் அறிதல் வேண்டும்”
ஒருமுறை இராமலிங்கனார் மூத்தவாளும், வாய்
வீச்சவாளுமான காஞ்சி சந்திரசேகந்திர சரசுவதியின் தமிழ் வெறுப்பு மனத்தை
அம்பலப்படுத்திடவும் துணிந்தார். அவர் உணவுப் பங்கீட்டு அலுவலராகப்
பணியாற்றிய காலத்தில் சங்கராச்சாரியைச் சந்திக்க நேரிட்டது. அப்போது
சங்கராச்சாரியார் தமிழ் ‘நீசபாசை’ என இழிவாகக் கூறித் தமிழில் பேச மறுத்து
விட்டு, சமசுகிருதத்தில் பேசியதை அவரால் ஏற்க முடியவில்லை. சங்கராச்சாரியை
சந்திக்கும் போதும், விடை பெறும் போதும் தமிழ்மொழிக்கு வணங்கிடும் தனது
தலையை சங்கராச்சாரிக்கு வணங்க மறுத்து தானொரு தன்மானத் தமிழன் என்பதைச்
சங்கராச்சாரிக்கு வெளிக்காட்டினார்.
பின்னர் சங்கரமடம் என்பது “பிராமணர்களின் கூடாரமே” என்று ஒரு பேட்டியில் ஓங்கி ஒலித்தார்.
‘தமிழால் முடியும்‘ என்றுரைத்து அல்லும் பகலும் அயராது ழைத்த ஆட்சிசொற் சிற்பியாம் இராமலிங்கனார் 1986இல் தமிழ் மண்ணை விட்டு மறைந்தார்.
இராமலிங்கனார் அவர்களால்
தோற்கடிக்கப்பட்ட ஆங்கில அடிவருடிகள் தற்போது உயர்நீதி மன்றத்தில் தமிழால்
முடியாது என்று பழைய பல்லவியைப் பாடி வருகின்றனர்.
‘தமிழால் முடியும்’ என்பதே இராமலிங்கனார் தமிழ்நாட்டிற்கு வழங்கிய தீர்ப்பாகும். அவரின் பிறந்த நாளில் பலமுறை உரக்கச் சொல்வோம்!
தமிழால் முடியும்! தமிழால் முடியும்!! தமிழால் முடியும்!!!
No comments:
Post a Comment