தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

12

  1952 இல் இந்தியப் பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடை பெற்றது. புதியன செய்யும் பொறியில் வல்லுநர் கோ.து.நாயுடு திராவிடர் கழகச் சார்பில் திருவில்லிப்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் நின்றார். கோ.து.நாயுடு  உழைப்பால் உயர்ந்த அறிஞர்; உலகம் சுற்றியவர்; பலகலைகள் கற்றவர்; பேருந்து வண்டிகள் நடத்தும் பெருஞ் செல்வர்; கோவை நகரைச் சார்ந்தவர். இவரை எதிர்த்து கருமவீரர் காமராசர் போட்டியிட்டார். காமராசர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராய் விளங்கியவர். தமிழ்நாட்டு அமைச்சரவையை ஆக்கவும் நீக்கவும் ஆற்றல் பெற்றவர். ஆங்கில ஆட்சியை அகற்ற நினைத்து, அடக்கு முறைக்குப் பயப்படாமல் உரிமைப் போராட்டத்தில் உறுதியுடன் தொண்டு செய்தவர். அதனால் எதிர்ப்பு இல்லாத தலைவராய்க் காமராசர் விளங்கினார்.
  விருதுநகர் சட்ட மன்றத்திற்கு வே.வ. இராமசாமி நின்றார். இலக்குவனார், பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட கோ.து.நாயுடுவையும், சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட வே.வ. இராமசாமியையும் ஆதரித்து உரிமை முறைப்படி பணி செய்தார். கல்லூரி ஆட்சிக்குழு செயலாளர் வே.வ. இராமசாமியும் கோ.து. நாயுடுவை ஆதரித்துத் தேர்தல் பணி ஆற்றினார். கல்லூரிப் பணியாளர்களில் தேர்தலில் முழுப்பங்கு கொண்டு முழுநேரமும் உழைத்தனர்.
  தேர்தல் முடிவு வந்தது. திருவில்லிப்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினராக காமராசரும், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக வே.வ. இராமசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  தேர்தலில் வென்ற வே.வ. இராமசாமி சில திங்கள் கழித்து இலக்குவனாரிடம் சொன்னார். ‘இலக்குவனார் இருக்கும்வரை கல்லூரிக்கு உதவ மாட்டோம்’ என்று கூறுகின்றனர் சிலர் என்றார். கட்சி வெறியால் காங்கிரசு நாடார் இலக்குவனாரைத் துரத்தத் திட்டமிட்டனர். நற்றமிழ் வளரவும், தமிழ் மக்கள் உரிமை பெற்றுச் சிறக்கவும் இலக்குவனார் செய்த பணிகளையும் மறந்தனர். ‘இலக்குவனார் இருக்கும் வரை இக்கல்லூரி கருஞ்சட்டையாய்க் காட்சியளிக்கும்’6 என்று நவின்றார்.
  நாடார் தலைவர் காமராசருக்கு எதிராகத் தேர்தல் வேலை செய்த இலக்குவனாரை இங்கிருக்க விடோம் என்று கூறினர். கல்லூரியின் ஆட்சிக் குழுவை அழைத்து ஆராய்ந்தனர். ஆட்சிக்குழு உறுப்பினர் ஞானமுத்து அவர்கள் திருநெல்வேலி இந்துக் கல்லூரியின் முதல்வர். அவர், “கல்லூரியில் கடமையைச் சிறப்புறச் செய்யும் இவரை (இலக்குவனாரை) எந்த வகையில் போகச் செய்வது? கல்லூரிக்கு வெளியே கட்டுப்படுத்தும் உரிமை நமக்கில்லை. ஒரு தீமையும் செய்திலர். வீண்பழி சுமத்திட வேண்டாம்”7 என்று கூறினார்.
  மேலும், “தேர்தலில் பங்கு கொள்வதில் தவறில்லை. நானே தேர்தலில் போட்டியிட்டதை நாடே அறியும். ஆசிரியர்க்குரிய உரிமையுமாகும். அதனால் அவர்மீது சினம் கொள்ள வேண்டாம்.”8 என்னும் நல்லுரை கூறினார்.
  சில நாள்கள் சென்ற பின்னர் இலக்குவனாரிடம் வே.வ. இராமசாமி ஒருநாள், “எங்களூர்ச் சாதி இயல்பு ஒருவிதம். உங்களால் அறிந்து கொள்ள முடியாது. ஒருவர் சொல்லுக்கு மதிப்பளிப்போம். கல்லூரியில் நீங்கள் இருந்தால் பெரிய நிதி அளிக்க மாட்டார்கள். எனவே நீங்கள் கல்லூரியை விட்டு நீங்கிட வேண்டும். இப்படி நான் கூறுவது மனச் சான்றுப்படி பார்த்தால் மாபெரும் குற்றந்தான். எனினும் கல்லூரி நன்மைக்காகக் கூறுகின்றேன்” என்றார்.
  அது கேட்ட இலக்குவனார், ‘அறமோ’ என்றார். அறன் அன்று எனினும் சாதி முறைக்குக் கட்டுப்படுவது என் கடனாகும். விரைவில் நீர் விலகிவிடுவது நல்லது. இல்லையேல் குறைகள் கூறி குற்றம் சாட்டி விலக்குவோம். வேறிடத்தில் வேலை பெறுவதற்கும் தடையாகிவிடும்” என்று வே.வ. இராமசாமி கூறினார்.
  உடனே இலக்குவனார்,  “நீங்கள் கூறுவது நல்லதல்ல. அறம் என்னைக் கைவிடாது. கொடுமைச் செயலுக்குப் பயப்பட மாட்டேன். நீதி மன்றம் ஏறி முறையிடப் பின்வாங்க மாட்டேன். எனவே நல்ல செய்ய எண்ணுங்கள்”  என்றார். மேலும், “தங்கள் கல்லூரி நாடார் கூட்டுறவால் நடத்தப்பட்டாலும் தமிழ் நாட்டரசின் உதவித் தொகை பெற்றே நடத்தப்படுகிறது. எனவே எல்லார்க்கும் இக்கல்லூரியில் உரிமை உண்டு. தெருவில் செல்வோர் கருத்தை மதித்துப் பொருத்தமின்றிக் குற்றம் சுமத்தி அகற்றத் துணிந்தால் நல்ல நெறி எவ்வாறு நிலைக்கும்? ஆசிரியருக்குத் தான் அமைதி வாழ்வு ஏது? விலக்குவீராயின் வீணேவீட மாட்டேன். ஆகையால் இவ்வெண்ணத்தை அறவே விட்டு விடுங்கள்”9 என்றார் இலக்குவனார்.
 “நீதி மன்றம் சென்றால் உமக்கு நான் உதவ மாட்டேன். சாதியினர் பக்கமே இருப்பேன்” என்றார்,  வே.வ. இராமசாமி.
 “அறத்தின் துணை எனக்குண்டு. எதற்கும் அஞ்சமாட்டேன்” என்றார் இலக்குவனார்.
  சில நாள் சென்றவுடன் செய்தித் தாள்களில் விளம்பரம் வெளிவந்தது, ‘விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரிக்குத் தமிழ்ப்பேராசிரியர் தேவை’ என்று. இலக்குவனாரை எவ்வாறாயினும் நீக்கிட முடிவு செய்து முனைந்து விட்டனர்.
             “நல்ல நாயைக் கொல்ல நினைப்பின்
                பித்துற் றதென்று பிறர்க்கறி வுறுத்தி
                சுடுமாப் போல சுமத்தினர் பழியும்” 10
நல்ல ஒரு நாயைக் கொல்ல நினைப்பவர் எத்தகைய செயலில் ஈடுபடுவாரோ அதைப் போன்று கல்லூரி வளர்ச்சியில் கருத்துக் கொண்ட இலக்குவனார் மீது குற்றம் கூறி விளக்கவினாக் கொடுத்தார்.  கல்லூரிச் செயலாளர் வே.வ. இராமசாமி கூறிய குற்றச் சாட்டுகள் மூன்று.
  1. உரிமை வேட்கை உணர்வை ஊட்டிய ஈ.வே.இரா. பெரியாரின் வகுப்புவாத மாநாட்டில் பேசியது.
  2. 1952இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறிஞர் கோ.து. நாயுடுவை ஆதரித்து, மக்களிடம் வாக்குகள் அளிக்க வேண்டிக் கேட்டமை.
  3. கவிச் சக்கரவர்த்தி கம்பன், தேசியப் புலவர் சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர்க்கு விழா நடத்தாமை.
மேலே குறிப்பிட்ட குற்றச் சாட்டுகளுக்கு இலக்குவனார் தகுந்த விளக்க  விடையளித்தார். அவை,
  1. பிறப்பால் வேற்றுமை பேசுதல் கொடியது என்று கூறிய துணிவுடைய பெரியார் நடத்திய உரிமை மாநாட்டில் தமிழ்நாட்டின் நலன் கருதியே அரசியல் விதிக்குக் கட்டுப்பட்டுக், கடமை உணர்ந்து கருத்து கூறினேன். இந்திய அரசுக்கு எதிராக பேசினேன் எனின் அரசே என் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும்.
  2. மக்களாட்சி முறையில் தேர்தலில் நிற்கவும், விரும்பும் அறிஞரைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை அனைவர்க்கும் உண்டு. திருச்சியில் திருநெல்வேலியில் ஆளும் கட்சியினரை எதிர்த்து நின்றார். அங்கெல்லாம் அவர்களை நீக்கவில்லை.
  3. தமிழ் மொழியின் சிறப்புக்கும், தமிழரின் பெருமைக்கும் இலக்கணங் கூறிய ஒல்காப்புகழ் தொல்காப்பியல் நாள் கொண்டாடச் செய்தேன்.
நல்லிசைப் புலமை பெற்ற தண்டமிழ்ச் செல்வியும், அரசியல் தூது ஆற்றிய பெருமையும் உடைய ஒளவை நன்னாள் கொண்டாடச் செய்தேன்.
அரசியல் பிழைத்தோர் அழிவர் என்பதை சிலம்பின் பேரால் உரைத்த சேர இளவல் இளங்கோவடிகளுக்கு இனிய நன்னாள் நடத்தினேன்.
  தனது நாட்டில் தாழ்வுற்றிழியும் மக்களின் இழிநிலை போக்கவும், தமிழக ஆட்சி தமிழ் மொழியில் நடக்கவும், முத்தமிழ் வளர்ந்து சிறக்கவும். புலவர் நாளும் மறுமலர்ச்சி நாளும் கொண்டாடியுள்ளேன்
என்று விளக்க விடை அளித்தார்.

குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 129-121
  2. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 127-131
  3. ச. இலக்குவனாh, துரத்தப்பட்டேன், அ-ள் 132-136
  4. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 170-179
  5. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 194-196
(தொடரும்)
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13)

அகரமுதல - மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015