(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12:   தொடர்ச்சி)

 தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

13

  இந்நிலையறிந்த ஆசிரியர் பெருங்குழுவும் இலக்குவனாரை அகற்றும் கொடுஞ் செயலைத் தடுக்கக்கூடிற்று. ஆங்கில மொழியில் ஓங்கிய சிறப்புப் பெற்ற வரும் நல்லுள்ளம் கொண்டவருமான சீதரமேனேன், ‘தன் கடமையைத் தவறாது செய்யும் இப்பேராசிரியர் (இலக்குவனார்) அகற்றப்படுவது குறித்து யாம் அஞ்சுகிறோம். நாளை நமக்கும் இந்நிலை ஏற்படாது இருக்குமா? ஆகவே இவரை அகற்றும் எண்ணத்தை நீக்கி, மனத்தில் அமைதியை நிலைத்திடச் செய்க’11 என்று மொழிந்தனர்.
  ‘இலக்குவனாரைக் கல்லூரியிலிருந்து அகற்றும் செய்தியை அறிந்து மாணவர்கள் மனக்கொதிப்படைந்து ஒன்று திரண்டு வீதிகள் தோறும் ஊர்வலம் சென்றனர். இலக்குவனாரை விலக்க வேண்டா. விலக்கின் விடமாட்டோம்’12 என்று முடிவு எடுத்தனர்.
மாணவர்க் கருத்தை மாற்ற நினைத்து சாதிப்
பகைமையைத் தூண்டி விட்டது நிருவாகம்.
  தமிழ்நாடு தமிழ் மக்களும் முன்னேற வேண்டும் என்ற கருத்துடைய கழகங்கள் இலக்குவனாரை விலக்கல் வேண்டா என்று வேண்டுகோள் விடுத்தன.
திராவிட நாடு சிறப்புற்றோங்கவும் மூடக் கொள்கை மற்றும் நீங்கவும் உழைத்த, உண்மைத் தொண்டர் ‘குத்தூசி’ குருசாமி ‘விடுதலை’ ஏட்டில், இலக்குவனாரை நீக்கும் செயலை இடித்துரைத்து எழுதினர். காரைக்குடியிலிருந்து வெளிவந்த ‘வாரச் செய்தி’ என்னும் கிழமையோடும் இலக்குவனார்க்குப் பரிந்து எழுதியது. எழுத்துவன்மை பெற்ற ஆசைத் தம்பி என்னும் அன்பர் தன்னுடைய, ‘தனியரசு’ என்னும் நாளேட்டில், ‘இலக்குவனாரை விலக்கும் செயலை விடுமின்’ என்று உரிமையோடு உரைத்து எழுதினார்.
  ஆட்சிக் குழுவின் செயலளர் வே.வ. இராமசாமி மக்கள் கருத்தையும் மாணவர் விருப்பத்தையும் மதிக்கவில்லை. மனச்சான்றையும் மதிக்கவில்லை. மாறாகக் குற்றம் சுமத்தி விளக்கம் கேட்டுப் பின் வேலையை விட்டும் நீக்கினர். இதனை,
                ‘உரிமை’ என்பதும் ஓர் குலம் என்பதும்
                வெற்றுரை என்பதை விளக்கி விட்டனர்
                சாதிகள் வேண்டா என்றே சாற்றி
                சாதிகள் நலனே தன்நலன் ஆகக்
                கடமைகள் ஆற்றும் கயமை ஈங்கு
                என்று நீங்குமோ இருநிலம் உய்யவே’ 13
என்ற அடிகளில் சாதிப்பற்றுக் கொண்டு சதி செய்யும் வீணர்களைச் சாடுகிறார்.
  வேலையை விட்டு நீக்கியதால் இலக்குவனார் அடைந்த இன்னல்கள் பல. பதினாறு ஆண்டுகள் ஆசிரியராக மாசில்லாத வகையில் தொண்டு செய்து அடைந்த பெருமையை இனி எளிதாக அடைய முடியுமா? வயதும் நாற்பத்திரண்டை அடைந்துவிட்டது. இந்த வயதில் பணி தேடிச் செல்லல், பணிவாய் வேண்டுதல். சமநிலையை உரிமையாய்ப் பெறுதல் எவர்க்கும் எளிதல்லவே. இனிதல்லவே.
  ஆசிரியர் பணிக்கு மாசு ஏற்படும் வகையில் இலக்குவனார் குற்றம் எதுவும் செய்யவில்லை. கொடுமை இழைக்கவில்லை. கூறிய குற்றமும் ஆராய்ந்தால் குற்றமேயன்று. குற்றம் எனக் கருதி கல்லூரி நிருவாகம் இடித்துரை இயம்பி விட்டிருக்கலாம். சாதியால் ஒருவர்க்கு கல்லூரியின் உதவித் தலைமை வழங்கிட, இலக்குவனாரை நீக்கும் முடிவை காலம் பார்த்துச் செய்துவிட்டனர். சாதிப் பற்றால் தகுமுறை அழித்தனர்.14
  வேலை நீக்கம் செய்யப்பட்ட இலக்குவனார் அறங்கூறும் அவை சென்று முறையிட்டார்.
  கருமைச் சட்டைக் கட்சியைச் சேர்ந்தவன் என்றும் புரட்சிக் கருத்தின் புகலிடமாக விளங்குபவன் என்றும் அரசை வெறுக்கும் அறவுரையாளன் என்றும் பற்பல இன்னாச் சொற்களைக் கூறி மன்றில் எதிர் வழக்காட வந்தனர் கல்லூரி நிருவாகத்தினர்.
 ‘கருஞ்சட்டைக் கட்சியினன் என்று குற்றஞ்சாட்டிக் கொடுமை புரிவர். எனினும் அவர்கள், கருஞ்சட்டைக் கட்சித் தலைவர் கடைக்கண் பார்வைக்கு அலைவார்கள். புரட்சிக்கருத்தினை உடையவன், பொல்லாங்கு செய்பவன் என்று இலக்குவனாரை நீக்கிவிட்டுச் சீர்திருத்தத்தில சிறந்தவர் போல வேடமிடுவர். அரசுப் பகைவன் அகற்றத் தக்கோன் என இலக்குவனாரை நீக்கி விடடு மறுபுறம் அரசினை வெறுத்துப் பேசும் ஆண்தகைபோல எதிர்க்கட்சிக்கு இனிய நண்பராக விளங்க முயல்வர்.’15 இவையெல்லாம் நடிப்பே (நாடகமே) என்பது நாட்டு மக்களுக்குத் தெரியாதததில் வியப்பில்லை.
  ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அறமன்றம் வழக்கை முடிப்பதற்கு முயலவில்லை. செல்வம், பதவியைத் துணையாகக் கொண்டு மெய்யாவும், மெய்யைப் பொய்யாகவும் நாட்டிட முயலும் வழக்கறிஞர் உரை வழியே நடுநிலை மன்றம் நாட்களைக் கடத்தியது. ஒழுக்கமும் உயர் நூல் விளக்கமும் உடைய வழக்கறிஞர் கந்தசாமி அறிவுரைப்படி இலக்குவனார் மீது கூறிய குற்றத்தை நிருவாகம் திரும்பப் பெற்றுக் கொள்ளவும், இலக்குவனாரும் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். வழக்கு மன்றம் சென்றதால் எந்தப் பயனும் இலக்குவனார் அடைந்தாரில்லை, கூறிய குற்றத்தை நீக்கிவிட்டால் மீண்டும் பணியிலன்றோ நியமிக்க வேண்டும். மாறாகப் பணியை விட்டிட வேண்டும் என்று பரிவுடன் வேண்டினர். வேறு வழியின்றிப் பணியை விட்டு விட்டனர் இலக்குவனார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 240-251
  2. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 259-265
  3. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 358-363
  4. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 454-471
  5. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன். அ-ள் 492-503
(தொடரும்)
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14)