தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு]

இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி

  நெல்லையில் பணியாற்றிய பேராசிரியர் சி.இலக்குவனார் அடுத்து விருதுநகர் செந்திற்குமாரநாடார் இந்துக்கல்லூரியில் (10.08.47 அன்று) தமிழ்த்துறைத்தலைவராகப் பணியில் சேர்ந்தார்; இக்கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பின்மையால் இளங்கலையில் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். கல்லூரியிலும் தமிழ் அமைப்புகள் மூலமாக நகரிலும் தம் தமிழ்த் தொண்டினைத் தொடர்ந்தார் பேராசிரியர்.
  “பேராசிரியர் (சி.இலக்குவனார்) சென்ற இடங்களில் எல்லாம் தமிழ்த் தொண்டே நிகழ்ந்தது. தமிழுக்கு மறுமலர்ச்சி என்பதை அவ்வவ் வட்டாரங்கள் உணர்ந்து போற்றவே கல்வி வளாகங்களிலும், புறப்பகுதிகளிலும் பணிசெதார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் புதிய அமைப்புகள், மன்றங்கள், கழகங்கள் உருவாயின. இருந்த பழைய அமைப்புகளும் புதுப்பொலிவு  கொண்டன. ஏழைமை நோக்குக்கு இடமாகி இருந்த தமிழ்த் துறையும்,தமிழ் வகுப்பும் ஏறுநடையிட்டு எவரையும் ஏறிட்டுப் பார்க்க வைத்தன. பணிக்களமும் பக்கத் திடமும் செதி இதழ்களில் விளக்கமுற்றன.”
 எனப் புலவர்மணியார் (செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்: பக்கம்:மு11-12) கூறுவது போல் இங்கும் தொடர்ந்த பேராசிரியரின் பணித்தொண்டுகளால் விருதுநகரில் தமிழ் மணம் பரவியது;  பகுத்தறிவும் வளர்ந்தது.
  தனித்தமிழ் என்றாலே பிராமணர்கள் சமசுகிருத எதிர்ப்பாகவும் பிராமண எதிர்ப்பாகவும் கருதுவதுதானே இயற்கை. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் பின்வருமாறு கூறுகின்றார்:
 சொற்களில் வேரை(roots)க் கொண்டு தூய தமிழ்ச் சொற்களை அறியலாம். ஆதலின், வகுப்பில் சொற்களின் வேர் பற்றியும் அறிவித்து தமிழ் வளத்தை எடுத்துக் காட்டினேன். இதனால் மாணவர்களிடையே தூய தமிழ்ப் பற்று வளர்ந்தது. பிராமண மாணவர்கள் இதனை விரும்பினாரிலர்.
  அறிவார்வமும் பேராசிரியர் சி.இலக்குவனார் மீது மதிப்பும் கொண்ட பிராமண மாணவர்கள் சிலர் இருப்பினும் பலர் எதிராக இருந்தமையால் பெற்றோர்கள் மூலம் பேராசிரியர் சி.இலக்குவனார் மீது கல்லூரியில் அரசியல் புகுத்துவதாக முறையிட்டனர். இவ்வாறு ஒரு புறம் சாதியின் அடிப்படையிலும் மறுபுறம் கட்சிஅரசியல் அடிப்படையிலும் பேராசிரியருக்கு எதிர்ப்புகள் வந்தன; அதே நேரம் பேராசிரியரின் பாடம் நடத்தும் திறனாலும் சொற்பொழிவுப் பாங்காலும் பகுத்தறிவுச் சிந்தனையாலும் பெரும்பான்மையர் அவர் பக்கம் நின்றனர்.
   பேராசிரியர் சி.இலக்குவனார் இங்கு ‘இலக்கியம்’ என்னும் திங்களிருமுறை இதழை நடத்தி வந்தார். ‘இலக்கியம்’ விடுதலைநாள் மலரில், தமிழுக்கு விடுதலை, கல்விக்கு விடுதலை, மக்களுக்கு விடுதலை, கலைக்கு விடுதலை என்னும் தலைப்புகளில் பலரின் கட்டுரைகளைப் பெற்று வெளியிட்டார். இதன்மூலம் தமிழர்க்கு ஏற்பட்டதாகக் கூறும் அரசியல் விடுதலையால் பயனில்லை. தமிழ் முழு விடுதலையடைந்தாலன்றித் தமிழர்க்குப் பயனில்லை என்பதை உணர்த்தினார்.
 “தூயதமிழ்ப் பற்றை மக்களுடையே வளர்த்தலும் சங்க இலக்கியத்தைப் பரப்பலும் தன் கடமைகளாகக் கொண்டு இலக்கியம் தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெற்று வந்தது” எனப் பேராசிரியரே இவ்விதழ் வளர்ச்சி குறித்துத் தம் வாழ்க்கை வரலாற்றில் குறித்துள்ளார். ‘இலக்கியம்’ இதழ் குறித்துத் தந்தை பெரியாரின் 20.12.47 ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் ‘எமது தீர்ப்பு’என்னும் நூல் மதிப்பீட்டுப் பகுதியில் பின்வருமாறு செய்தி இடம் பெற்றிருந்தது.
இலக்கியம்
 (திங்கள் இருமுறை)
 ஆசிரியர் : சி.இலக்குவன்
 திருநெல்வேலி
(புல்சுகேப் 1/8, 42 பக்கங்கள். தனி இதழ் 0-4-0. ஆண்டுக்கட்டணம் 4-0-0)
  தமிழக மக்களின் பழமைக்கும் பெருமைக்குமுரிய இலக்கியங்களை – தமிழ்ப் பொதுமக்களை நீண்ட நாளாக அச்சுறுத்திக் கொண்டு வந்த இலக்கியங்களை – தமிழ் மக்கள் சுவைக்க வேண்டும்; தமிழர், தம் தனி நாகரிகம்,பண்பு முதலியவற்றை யுணர்ந்து இக்காலப் போலி மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தோடு   இவ்விலக்கியம் தோன்றியிருக்க வேண்டும் என மலர் 14, 15 அறிவிக்கின்றது.
  தாமரையில் தவழும் புலி, வில், கயல் அரசியல் கட்சியைத் தழுவியதா? என்பது இதிலிருந்து அறிய முடியவில்லை.
   இலக்கியத்திற்கு அடிப்படையான மக்கள் வாழ்வு வளர, ‘இலக்கியம்’ வளர்வதாக என மனமுவந்து கூறுகின்றோம். திராவிடர்கள்-சிறப்பாகத் திராவிட மாணவர்கள் தவறாது படித்துப் பயனடைய வேண்டும்.
  குடியரசு இதழின் வாழ்த்தினைப் போலத் தமிழன்பர்கள், திராவிட இயக்கத்தினர், மாணவர்கள் வரவேற்பைப் பெற்று இலக்கியம் சிறப்பாகப் பணியாற்றியது;  தமிழ் இலக்கியங்களை மக்கள் இலக்கியங்கள் என எளிமையாக மக்களிடையே பரப்பும் பணியில் வெற்றி கண்டது.
 விருதுநகரில் பேராசிரியர் சி.இலக்குவனார் ஆற்றிய அரும்பணி குறித்து அவரது வரிகளிலேயே நாம் பின்வருமாறு அறியலாம் :
“விடுமுறைக் காலங்களில் வெளியூர்கட்குச் சென்று திருக்குறள் பற்றியும் சங்க இலக்கியங்கள் பற்றியும் சொற்பொழிவு ஆற்றும் திட்டங்களையும் மேற் கொண்டேன். இராமாயணம், பாரதம் முதலிய வடமொழி சார் நூல்களைப்பற்றி மக்கள் அறிந்துள்ள அளவு பண்டைத் தமிழிலக்கியங்கள்பற்றி அறியாதிருந்தனர். மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டியான தமிழ் மறையாம் திருக்குறளைத் தமிழ் மக்கள் அறியாதிருந்தது மிகமிக இரங்கத்தக்கது அன்றோ? ‘வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ திருக்குறளைப் பற்றி அறியாமல் இருந்த அவல நிலையைப் போக்குவதற்குச் சொற்பொழிவுத் திட்டம் அமைத்துச் சிற்றூர்களிலும் பேரூர்களினும் சென்று சொற்பொழிவு ஆற்றினேன். மகிழ் உந்துகளிலும் மாட்டு வண்டிகளிலும் சென்றுள்ளேன்.  சிறு வீட்டிலும் தங்கினேன். பெருமாளிகைகளிலும் தங்கினேன். கூட்டங்கள் அமைப்பதற்குரிய வேண்டுகோள்களையும் கூட்ட நிகழ்ச்சித் திட்டங்களையும், நிகழ்ந்த கூட்டங்களின் சொற்  பொழிவுகளையும், பெரியார் அவர்களால் நடத்தப்பட்டு வந்த ‘விடுதலை’ இதழ் வெளியிட்டு வந்தது. அப்பொழுது அதன் ஆசிரியராய் இருந்த என் மதிப்புக்குரிய நண்பர் குத்தூசி குருசாமி அவர்களும் பெருந்துணையாய் இருந்தனர். பயன் கருதாமல் இப்பணியைச் செய்து கொண்டு இருந்த எனக்குப் பெரியார் அவர்களும் குத்தூசி குருசாமி அவர்களும் என்னை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகத், தமிழ் அன்பு பூண்ட செல்வர் ஒருவரை மாதம் ஐம்பது வெண் பொற்காசுகள் நன்கொடையாக ஓராண்டு கொடுக்கச் செய்தனர். பயன் கருதாப் பணிக்குப் பணம் பெறுவதற்கு என் உள்ளம் இடந்தரவில்லை என்றாலும், பொருள் இழப்பில் நடந்து கொண்டிருந்த ‘இலக்கியம்’ இதழைத் தொடர்ந்து நடத்த உதவியாகும் என்று கருதியும் அவர்களாகக் கொடுக்க முன் வந்த பெருந்தன்மையை இகழக்கூடாது என்று எண்ணியும் ஏற்றுக் கொண்டேன்.”
  பேராசிரியர் சி.இலக்குவனாரின் இந்தி எதிர்ப்புப் பணிகளும் பெரியார் தொடர்பும் தனித்தமிழ் உணர்வும் பேராயக்கட்சியின் வளர்ச்சிக்கு எதிரானவையெனக் கருதி அவருக்குத் தொல்லைகள் கொடுத்துப் பணியிலிருந்து நீக்க அரசு திட்டமிட்டது. மெய்யியல் அறிஞர் சாக்ரட்டீசு இளைஞர்களைக் கெடுப்பதாக அக்காலத்தில் பழமைவாதிகள் அவலக்குரல் எழுப்பினர். இக்காலத்திலோ பேராசிரியரின் தமிழியச் சிந்தனைகள் இளைஞர்களைக் கெடுக்கும் எனக் குற்றம் சுமத்திய பேராயக்கட்சியினரின் ஊதுகுழலான அரசு, அவர் கல்லூரியில் தொடர்ந்து நீடிப்பது அஞ்சத்தக்கது; இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள்(His Continuance in the college is dangerous; and the youngsters will be spoiled) எனக் கல்லூரிக்கு எழுதியது. இருப்பினும் கல்லூரி ஆட்சிக்குழுவினர் இதை ஏற்கவில்லை.
 இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் பின்வருமாறு தம் வாழ்க்கை வரலாற்றில் குறித்துள்ளார்:
  எனது உளக் கருத்திற்கேற்பப் பெரியார் அவர்கள் திராவிடர் கழக மாநாட்டுகளுடன் திருக்குறள் மாநாடுகளையும் நடத்தினார்கள். இத் திருக்குறள் மாநாடுகளில் எனக்குச் சிறப்புப் பங்கும் பணியும் அளித்தனர். . . . பெரியார் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட திருக்குறள் மாநாட்டுக்குச் சோற்பொழிவாளராகவும் இந்தி எதிர்ப்பு மாணவர் மாநாட்டுக்குத் தலைவராகவும் சென்று வந்துள்ளேன். உள்ளூர்ப் பேராயக் கட்சியினர் என்னுடைய தொண்டினைக் காரணமின்றி வெறுக்கத் தொடங்கிவிட்டனர். உள்ளூர்ச் சுவர்களில் ‘இலக்குவனாரே உஃசார், எச்சரிக்கை’ என்றெல்லாம் எழுதி வைத்தனர். நகரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் என்னைப் பற்றித் தாக்கிப் பேசினர். அரசினர்க்கு என் இந்தி வெறுப்பைச் சுட்டிக் காட்டியும், திருக்குறள் வகுப்பில் அரசைத் தாக்கிப் பேசுவதாகக் கதை கட்டியும் கடிதங்கள் எழுதினர். அரசினரும் அலுவலர்களை அனுப்பி ஆராய வைத்தனர். அப்பொழுது கல்வியமைச்சராயிருந்தவர் அக்கல்லூரிக்கு வந்த ஞான்று என்னைக் கல்லூரியைவிட்டு விலக்கவும் அறிவுரை கூறினார். “நாங்கள் அவரை  விலக்கமாட்டோம்; விரும்பினால் நீங்கள் விலக்கி விடுங்கள்” என்று மொழிந்துவிட்டனர் கல்லூரிப் பொறுப்பாளர்கள். யான் இந்தியை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் என்னைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அரசு என்னைக் கல்லூரியிலிருந்து அகற்றத் திட்டமிட்டது.
 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்