ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(15)

3.ஒருமைப்பாட்டு உணர்வு

  ‘இருபது கட்டளைகள்’ நாட்டை உயர்த்தக் கூடிய நல்ல திட்டங்களை உணர்ச்சிகரமான நடையில் சொல்லும் கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகும். நாடு வளமுறவும் முன்னேறவும் இளைஞர்களையே நம்பி இருக்கிறது. நாட்டின் இதயம் நல்இளைஞரேயாவர். அதனால்தான் பெருங்கவிக்கோ இளைஞரை நோக்கிப் பாடுகிறார்.
இதயங்கள் இந்த நாட்டின்
இளைஞரே நீங்கள் அன்றோ?
பதம்பெற வாழ்வுப் பாதை
பலப்பல மேன்மை கூட்ட
 நிதம்உழைப்பைத்தொ ழுங்கள்!
நிகரிலா எப்ப ணிக்கும்
இதம்பெறும் ஆற்றல்கொண்டே
ஏற்றங்கள் காண்பீர்
என்றும் சரிசம கோசலிச வாய்ப்பினை ஆக்கி வாய்மையின் துணையால் வெல்வோம் என்னும் கவிஞர் உறுதியாய்க் கூறுகிறார்.

“பணிகள்தான் இல்லை என்னும்
பாதகம் இல்லை என்போம்!
அணிபெரும் வகையில் ஓங்கும்
ஆய்பல பணிக ளுக்கும்
துணிவுடன் இளைஞர் செல்லும்
சுடர்புகழ்த் திட்டம் காப்போம்!
மணிமணியாக அன்னை
மாபூமி கொழிக்கச் செய்வோம்!”
மொழிகளினால் பேதங்கள் வளர்த்து நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு செய்வோரை வன்மையாய் கண்டிக்கிறார். கவிஞர்.
“மொழிகளிலே பேதங்கள் வளர்த்திட்டே ஒருமை தன்னை
பழிகளிலே வசை நஞ்சை வளர்க்கின்றாய் மனிதா ஏன் ஏன்?
உணவுகளில் பலவகைகள் உண்ணுவது .வயிறு ஒன்றே
மணங்களிலே பலவகைகள் நுகருவதோ மூக்குஒன்றே.
பணவகைகள் மணவகைகள் வேறெனினும் நோக்கம் ஒன்றே.
பிணமாகிப் போவதும் நமக்கொன்றே (மனிதா) பின் ஏன் கூச்சல்?
 குமரிமுதல் இமயம்வரை கொள்கைவழி சமமே செய்வோம்.
தமரினைப்போல் மதமொழி யால் வேறுபாடு வளர்ப்போர் தம்மைச்
சமம் எண்ணும் நிலை செய்வோம் அவரவரின் தாய்மொழிக்கே.
அமரநிலைதான் தருவோம் மனிதர் மதம் ஒன்றே என்போம்!”
சிந்தனையைச் செம்மைப் படுத்தி, உயர் அறிவால் ஒற்றுமை காணவேண்டியதன் முதன்மைத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார்.
“எல்லாருமே எல்லார்க்கும் ஒன்றென்போம் அதற்கே ஓங்கு.
வல்லமையாம் நமது மனச் சிந்தனைநன் நடைகள் காண்போம்:
பல்லாற்றும் பல்வழியும் பயனாகும் முயற்சி முற்றும்
கல்வி,உயர் அறிவாலே இந்திய்த்தாய் ஒருமை காண்போம்!”
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்