(உ.வே.சா.வின் என் சரித்திரம் 67 : ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு – தொடர்ச்சி)

என் சரித்திரம் :  அத்தியாயம்-41

‘ஆறுமுக பூபாலர்’

ஆறுமுகத்தா பிள்ளையைப் பார்த்தாலே எனக்கு மிகவும் பயமாக

இருக்கும். பிறருக்கு ஆக வேண்டியவற்றைக் கவனித்தாலும் என்ன

காரணத்தாலோ எல்லோரிடத்தும் அவர் கடுகடுத்த முகத்தோடு பெரும்பாலும்

இருப்பார்; நான் மிகவும் சாக்கிரதையாக நடந்து வந்தும் அவருக்கு என்னிடம்

அன்பு உண்டாகவில்லை. பிள்ளையவர்களிடத்தில் அவர் மிக்க மரியாதையும்

அன்பும் உடையவராக இருந்தார். அக்கவிஞர் பெருமான் என்னிடம்

அதிகமான அன்பு காட்டுவதையும் அவர் அறிவார், அப்படி இருந்தும் அவர்

என்னிடம் இன்முகத்தோடு பேசுவதில்லை. பிள்ளையவர்கள் என்பால்

அன்புடையவராக இருப்பதைக் கூட அவர் அந்தரங்கத்தில் ஒருவேளை

வெறுத்திருக்கலாமோ என்று நான் எண்ணியதுண்டு.

பிள்ளையவர்கள் வைத்திருந்த பேரன்புதான் எல்லாவிதமான

இடையூறுகளையும் பொறுத்துவரும் தைரியத்தை எனக்கு அளித்தது.

நள்ளிரவில் விருந்து

ஆறுமுகத்தா பிள்ளை அனுசரிக்கும் முறைகள் சில மிகவும்

விசித்திரமானவை. மாலையில் அவர் அனுசுட்டானம் செய்த பிறகு கந்த

புராணத்தைப் பாராயணம் செய்வார். பிள்ளையவர்களுக்கு முன் இருந்து

அதைப் படிப்பார். அவர் கேட்டால், பிள்ளையவர்கள் இடையிடையே

கடினமான பதங்களுக்குப் பொருள் சொல்லுவார். அப்படி அவர் படித்ததை

முறைப்படி பாராயணம் செய்ததாகவோ, ஒழுங்காகப் பாடம் கேட்டதாகவோ

எண்ண இடமில்லை. ஆனாலும் அவர் பாராயணம் செய்துவிட்டதாகவும்

பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு விட்டதாகவும் பலரிடம் சொல்லி

மகிழ்வார். இப்பாராயணம் இராத்திரி ஒன்பது மணி வரையில் நடைபெறும்.

நான் பாடம் கேட்கும்போது அவர் பாராயணம் செய்ய வந்தால் தம்மை

நான் அலட்சியம் செய்வதாக ஒருவேளை எண்ணி விடுவாரோ என்று பயந்து

என் பாடத்தை உடனே நிறுத்திப் புத்தகத்தை மூடி வைப்பேன். அவர்

படிக்கும்போது நானும் கவனித்து வருவேன்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் எல்லாரும் படுத்துக்கொள்வார்கள்;

சாப்பிடாமலே படுத்து உறங்குவார்கள். பன்னிரண்டு மணி அல்லது ஒரு

மணிக்கு ஆறுமுகத்தா பிள்ளை எழுந்து இலை போடச் சொல்லுவார்.

தூங்கினவர்களை எழுப்பி உண்ணச் செய்வார். அயலூர்களிலிருந்து யாரேனும்

வந்து திண்ணையில் தங்கி இருப்பார்கள். அவர்களையும் அழைத்து உணவு

கொள்ளச் சொல்லுவார்.

இந்த அர்த்தராத்திரி விருந்து நடைபெறும் பொழுது நான்

பிள்ளையவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பாடம் கேட்க வேண்டும்.

ஆறுமுகத்தா பிள்ளை இட்ட கட்டளை இது.

ஒன்பது மணிக்கு மேல் எல்லாரும் படுத்துக் கொண்ட பிறகு நான்

சிறிது நேரம் படித்துவிட்டுத் தூங்கிவிடுவேன். அத்தமித்தவுடன்

பிள்ளையவர்கள் அனுசுட்டானம் செய்து மீளும்பொழுதே அக்கிரகாரத்தில் என்

ஆகாரத்தை முடித்துக் கொள்பவன் நான். பாதிராத்திரியில் விழித்துக் கொண்டு

பிள்ளையவர்கள் சாப்பிடும் போது பாடம் கேட்பதால் என்ன பயன்

விளையப்போகிறது? எனக்குத் தூக்கக் கலக்கமாக இருக்கும். என் ஆசிரியர்

உண்ணும் போதே எப்படித் தடை இல்லாமல் பாடம் சொல்ல முடியும்?

ஆதலின் அப்போது நான் கேட்கும் பாடம் என் நன்மையை உத்தேசித்ததாக

இராது. ஆறுமுகத்தா பிள்ளையின் திருப்தியை எண்ணியே நான்

அர்த்தராத்திரியில் பாடம் கேட்டு வந்தேன்.

ஆறுமுகத்தா பிள்ளையின் கோபம்

ஆனாலும் சில தினங்களில் நான் விழித்துக் கொள்ளாமல் தூங்கிப்

போய்விடுவேன். அதனால் பாடம் கேளாமற் போக நேரும். அத்தகைய

சமயங்களில் ஆறுமுகத்தா பிள்ளை சாப்பிட்டவுடன் வந்து என்னை எழுப்பிக்

கண்டிப்பார்; உடனே எழுப்பாவிடினும் மறு நாளாவது கண்டிக்கத்

தவறமாட்டார். “உமக்கு எங்கே படிப்பு வரப் போகிறது? சாப்பிடுவதும்

தூங்குவதுமே உமக்குப் பிரியமான தொழில்கள்; நீர் பெரிய சோம்பேறி.

இராத்திரி எழுந்து பாடம் கேட்பதை விட உமக்கு வேறு வேலை என்ன?”

என்று கோபித்துக் கொள்வார். பிறருடைய கசுட்ட சுகங்களை அறிந்துகொள்ள

முயலாத மனிதர்களிடம் பழகுவதைவிட அவர்களுடைய சம்பந்தமே இராமல்

வாழ்வது நலம். நான் ஆறுமுகத்தா பிள்ளையின் கோபத்தை ஆற்றுவதற்கு

உரிய சக்தியில்லாதவன்; “தெய்வமே!” என்று அவருடைய கோபச் சொற்களைக்

கேட்டு வாய் பேசாமல் நிற்பேன்.

புத்தகம் மறைந்த மாயம்

ஒருநாள் நள்ளிரவில் வழக்கப்படி நான் பாடம் கேட்கத் தவறி

விட்டேன்; எல்லாரும் உண்பதற்கு எழுந்தபோது நான் எழவில்லை.

விடியற்காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு வழக்கம் போல்

பாடம் கேட்க எண்ணி முதல் நாள் இரவு புத்தகம் வைத்த இடத்திலே

போய்ப் பார்த்தேன். அங்கே அது காணப்படவில்லை. நான் மாயூரப்

புராணத்தைக் கேட்டு வந்த காலம் அது. வேறு சில இடங்களில்

அப்புத்தகத்தைப் பார்த்தேன்; காணவில்லை. வேறு எதையாவது

படிக்கலாமென்று எண்ணி என் புத்தகக் கட்டு இருந்த இடத்திற்குச் சென்று

பார்த்தேன்; அந்தக் கட்டும் அங்கே இல்லை. “ஆறுமுகத்தா பிள்ளை செய்த

வேலை இது; அவருடைய கோபம் இன்னும் என்ன என்ன துன்பங்களை

விளைவிக்குமோ!” என்று எண்ணும்போது என் உடல் நடுங்கியது. “இந்த

இடத்தில் வந்து மாட்டிக் கொண்டோமே!” என்று வருந்தினேன்.

வாடிய முகத்துடன் ஆசிரியரிடம் சென்று, “புத்தகங்களைக்

காணவில்லை” என்று சொன்னேன். அவர் அங்கிருந்த வேலைக்காரர்களிடம்

சொல்லித் தேடச் செய்தனர். அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. “இந்த

விடயத்தைத் தம்பியிடம் சொல்லலாமே” என்றார்.

ஆறுமுகத்தா பிள்ளை அப்பொழுது தூக்கத்தினின்றும் எழவில்லை.

அவர் எப்பொழுதும் எட்டு மணி வரையில் தூங்குவார். எட்டு மணியளவில்

கண்ணை மூடியபடியே எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருப்பார்; “துரைசாமி”

என்று தம் பிள்ளையைக் கூப்பிடுவார். அச்சிறுவன் அவர்முன் வந்து நின்று

“ஏன்?” என்பான். அவர் அவன் முகத்தில் விழிப்பார். பிறகுதான் எழுந்து

வெளியே வருவார், தம் குமாரன் முகத்தில் விழிப்பதால் நாள் முழுவதும்

சந்தோசமாகச் செல்லும் என்பது அவர் எண்ணம். மனிதனுடைய வாழ் நாளில்

சந்தோசம் இவ்வளவு சுலபமாகக் கிடைப்பதாக இருந்தால் உலகத்தில்

எல்லோரும் இம்மார்க்கத்தைக் கைக்கொள்ளலாமே!

ஆறுமுகத்தா பிள்ளை தினந்தவறாமல் காலையில் துரைசாமியின்

முகத்தில் தான் விழித்து வந்தார். ஆனால், அவர் வாழ்வில் அதிக இன்பம்

ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.