(உ.வே.சா.வின் என் சரித்திரம் 121: நான் சொன்ன பாடல்-தொடர்ச்சி)

பிறகு திங்கட்கிழமை நல்ல வேளையில் கல்லூரிக்குப் போக வேண்டுமென்று எண்ணி சோதிடரைக் கண்டு பார்த்த போது 12 மணிக்குமேல் நல்லவேளை யென்று தெரிந்தது. “நாளைக்குப் பதினொன்றரை மணிக்கு சித்தமாக இருந்தால் நான் கல்லூரிக்குப் போய்ச் சொல்லியனுப்புகிறேன். அப்போது வரலாம்” என்று செட்டியார் சொல்லி எனக்கு விடை கொடுத்தனுப்பினார். அன்று மாலையில் முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வந்தேன்.

சொல்லும் முறை சரியானபடி இருந்தால் அவர்களுடைய அன்பைப் பெறலாம். பாடங்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டும், அடிக்கடி நடந்த பாடங்களில் கேள்வி கேட்க வேண்டும்; மற்ற ஆசிரியர்களிடமும் சாக்கிரதையாகப் பழகவேண்டும்” என்று அவர் பின்னும் பல போதனைகளை எனக்குச் செய்தார்.

திங்கட்கிழமை பகற்போசனம் செய்து விட்டுச் சேசையர் வீட்டில் காத்திருந்தேன். பதினொன்றரை மணிக்குச் செட்டியார் உத்தரவுப்படி கல்லூரியிலிருந்து இரண்டு மாணாக்கர்கள் என்னை அழைக்க வந்தார்கள். நான் சுப்பிரமணிய தேசிகர் அளித்த உடைகளில் சட்டையை அணிந்து அதன் மேல் துப்பட்டாவைப் போர்த்துத் தலையில் சால்வையைக் கட்டிக் கொண்டு சென்றேன். அந்தக் கோலத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்கே சிரிப்பு வருகிறது.

கல்லூரியின் தாழ்வாரத்தில் மேலைக் கோடியிலுள்ள ஒரு தூணருகில் தியாகராச செட்டியாரும், ஆர். வி. சீரீநிவாசையரும் என்னை எதிர்பார்த்து நின்று வரவேற்று அழைத்துச் சென்றார்கள். நல்ல வேளையென்று குறிப்பிட்டிருந்த காலம் தமிழ்ப்பாடம் இல்லாதவேளை. அவ்விருவரும் நுழைகலை(எப். ஏ.) இரண்டாம் வகுப்புக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கே பாடம் நடத்திய அனுமந்தராவிடம் முன்பே, “இவர் நல்ல வேளையில் பாடம் சொல்ல வேண்டியிருப்பதால் உங்கள் மணியை இவருக்குக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்ததனால் நாங்கள் வகுப்புக்குள் புகுந்தவுடன் ஹனுமந்தராவு தம் ஆசனத்தை விட்டு எழுந்து எங்களை வரவேற்றார்.

“இப்படி உட்காருங்கள்” என்று மேடையின் மீதிருந்த நாற்காலியை எனக்குச் சுட்டிக்காட்டினார் அனுமந்தராவு. எனக்கு அவ்வளவு பேர்களுக்கு முன்னால் அங்கே இருப்பதற்குத் துணிவுஉண்டாகவில்லை. என் கருத்தை அறிந்த செட்டியார், “இது திருவாவடுதுறை மடமன்று; இந்த இடத்தில் உட்கார வேண்டியது உங்கள் கடமை” என்று சொல்லவே நான் போய் நாற்காலியில் அமர்ந்தேன். எதிரே இருந்த பலகையில் அனுமந்தராவு, சீநிவாசையர், தியாகராச செட்டியாரென்பவர்களும் ஓய்வுள்ள வேறு சில ஆசிரியர்களும் இருந்தனர். அந்த வகுப்பில் எழுபது பிள்ளைகளுக்கு மேல் இருந்தனர். முன் வரிசையில் அரசு உதவிததொகை பெற்ற இருபது பிள்ளைகள் உட்கார்ந்திருந்தனர். வகுப்பிலிருந்த பிள்ளைகளிற் பலர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் முதிர்ந்தவர்களாகத் தோற்றினர்.

விநாயகக் கடவுளையும் வேறு தெய்வங்களையும் மனத்தில் தியானித்துக் கொண்டு பாடம் சொல்லத் தொடங்கினேன். நாலடியாரில், “இரவச்சம்” என்னும் அதிகாரத்தை முதலிலிருந்து சொன்னேன். மடத்தில் பாடம் சொன்ன பழக்கத்தால் எனக்கு அங்கே சொல்வதில் அச்சமோ சோர்வோ உண்டாகவில்லை. முதற் செய்யுளை சங்கராபரண ராகத்தில் நிறுத்திப் படித்தேன். பள்ளிகூடப் பிள்ளைகளை ஓரளவு சங்கீதத்தால் வசப்படுத்தலாமென்பதை அனுபவத்தால் தெரிந்து கொண்டேன். நான் பாடம் சொல்லத் தொடங்கிய செய்யுள் வருமாறு:

நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்

தம்மாலாம் ஆக்கம் இலரென்று-தம்மை

மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும்

தெருண்ட அறிவி னவர்.”

[இதன் பொருள்: ‘இந்த ஏழைகள் நம்மாலே முன்னுக்கு வருபவர்கள்: இவரால் தமக்கோ, நமக்கோ உண்டாகும் லாபம் ஒன்றுமில்லை’ என்று தம் செல்வத்தைப் பெரிதாக எண்ணி மயங்கிய மனத்தையுடையவர்களைப் பின் தொடர்ந்து தெளிந்த அறிவுடையவர்கள் செல்வார்களோ? [நல்கூர்ந்தார்-வறியவர். ஆக்கம்-விருத்தி. மருண்ட- மயங்கிய, செல்பவோ-செல்வார்களோ? தெருண்ட-தெளிந்த.]பொருள் சொல்லும் போது, உலகத்திலே பணக்காரர்கள் இறுமாப்பினால் ஏழைகளை அவமதிப்பதையும் ஓர் உதவி செய்துவிட்டால் அதைத் தாங்களே பெரிதாகச் சொல்லி அவ்வுதவி பெற்றவர்களை இழிவாகப் பேசி, ‘இந்த உதவியை இவரிடம் பெறும்படி நம்மைத் தெய்வம் ஏன் வைத்தது!’ என்று அவ்வேழைகள் தம்மைத் தாமே நொந்து கொள்ளும்படி செய்வது முதலியவற்றையும் எடுத்துரைத்தேன். ஒரு பாடலைப் பாடம் சொல்லும்போது, வார்த்தைக்கு வார்த்தை அருத்தம் மாத்திரம் சொல்லி நிறுத்தினால் கேட்பவர்களுடைய மனம் அதில் பொருந்தாது. அதனால், உபமானங்களையும், உலக அனுபவச் செய்திகளையும் எடுத்துச் சொல்லி மாணாக்கர்களுடைய மனத்தைப் பாட்டின் பொருளுக்கு இழுத்தேன்.

ஐந்து பாடல்கள் அந்த மணியில் முடிந்தன. இடையே, யாசகம் செய்வதனால் உண்டாகும் இழிவைப் பற்றி நான் மேற்கோள்கள் சொன்னபோது செட்டியார் குசேலோபாக்கியானத்திலிருந்து, “பல்லெலாந் தெரியக் காட்டி” என்னும் செய்யுளை எடுத்துச் சொல்லி அவ்விசயத்தைப் பின்னும் விளக்கினார்.


(தொடரும்)